சென்னை: பருப்பு, எண்ணெய் வகைகளை நியாயவிலை கடைகளில் கூடுதலாக வழங்க பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த காலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்த போது, வெளிச்சந்தையில் அவற்றின் விலையை கட்டுப்படுத்த நியாயவிலைக் கடைகளிலும், கூட்டுறவு அங்காடிகளிலும் மானிய விலையில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கு எதிர்பார்த்த பலனும் கிடைத்திருக்கிறது.
அதே முறையை இப்போது அரசு கடைபிடிக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் தொடர்ந்து வழங்கப்பட்டு வந்த உளுந்து சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டு விட்டது. உளுந்து விற்பனை மீண்டும் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டாலும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். வெளிச் சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறையும் வரை குடும்ப அட்டைக்கு தலா 2 கிலோ துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாமாயிலும், கூடுதலாக சமையல் பொருட்கள் தொகுப்பும் மானிய விலையில் வழங்குவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.