×

சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதியில் விதை ஆய்வு குழுவினர் திடீர் சோதனை

சேத்தியாத்தோப்பு: கடலூர் மாவட்டத்தில் முறையான ஆவணங்கள் இல்லாமல் விதைகள் விற்பனை செய்யபடுவதாக விதை ஆய்வு குழுவிற்கு புகார்கள் வந்ததையடுத்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவுறுத்தலின்பேரில் வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர்கள் சோமு, சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில் ஆய்வு செய்தனர். அப்போது விதை ஆய்வாளர்கள் முருகன், நடராஜன், கவுதமி, சுமதி, தமிழ்வேல், செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இதனையடுத்து பரங்கிப்பேட்டை, அண்ணாகிராமம், புவனகிரி, பண்ருட்டி, விருத்தாசலம், கம்மாபுரம், உள்ளிட்ட வட்டாரங்களில் உள்ள அரசு வேளாண் விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதைவிற்பனை நிலையங்கள் மற்றும் விதை சுத்திகரிப்பு மையங்களில் ஆய்வு செய்தனர். தனியார் விதை விற்பனை நிலையங்களை ஆய்வு செய்தபோது அங்கு இருப்பு வைக்கப்பட்டிருந்த குறுவைப்பட்ட நெல் ரகமான எ.டி.டீ-43, எ.டி.டீ.-45, ஐ.ஆர்-50, ஏ.எஸ்.டி.- 16, கோ- 51, மானாவரி பட்டத்திற்கான வீரிய ஒட்டு கம்பு ரகங்களான 86 எம்- 38, அங்குர் 045, நித்ய விகாஸ், நித்யகுரு, கிருஷ்ணா, கணேஷ் போன்ற விதை குவியல்களின் தரத்தினை அறிய 46 விதை மாதிரிகள் எடுத்து கடலூர் விதை பரிசோதனை நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தனியார் விதை விற்பனை நிலையங்களில் நெல், வீரிய ஒட்டுகம்பு, மக்காசோளம் விதைக்குவியல் 4.1 லட்சம் மதிப்புடைய 2.1 டன் விதைகளின் ஆவணங்கள் இல்லாததது கண்டறியப்பட்டது. அவற்றை விற்பனை செய்ய தடைவிதித்து, விதை சட்டத்தின்படி நடவடிக்கை எடுத்தனர். பின்னர் நெல் விதைக்கும் முன்பு 24 மணிநேரம் தண்ணீரில் நன்கு ஊறவைத்து 12 மணி நேரம் நிழல்சார்ந்த இடத்தில் சாக்கில் குவித்து மூன்றாம் கொம்பு முளைக்கும்போது, மாலையில் நாற்றங்காலில் சீரான தண்ணீரை தேக்கி விதைக்க வேண்டும் என்று விவசாயிகளிடம் எடுத்து கூறினர்.

Tags : Seed ,Sethiyathoppu ,Kattumannarkovil , Sethiyathoppu, Kattumannarkovil, Seed Research, Testing
× RELATED சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர்...