சென்னை: சென்னையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க அரசுக்கு சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்த ரங்கநாதன் என்பவர், அதே அலுவலக கட்டடத்தில் இருந்த சிறுமியை 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாலியல் வன்கொடுமை செய்தார்.
இச்சம்பவம் தொடர்பாக, அப்பகுதியில் இளநீர் வியாபாரம் செய்து வந்த வியாபாரி அளித்த தகவலின் அடிப்படையில், சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ரங்கநாதனுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி, பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் சந்தேகத்திற்கு இடமின்றி காவல்துறையினர் நிரூபித்துள்ளனர். எனவே, குற்றம்சாட்டப்பட்ட ரங்கநாதனுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவேண்டும் என தமிழக அரசுக்கும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.