கூடலூர்: லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் தடுப்பணை கட்ட நேற்று பூமிபூஜை நடைபெற்றது. தடுப்பணை கட்டும் இடத்தை மாற்றி அமைக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.தேனி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் இருந்து மதுரைக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல ரூ.1,296 கோடி மதிப்பில் கூட்டுக் குடிநீர் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கூடலூர் குருவனூத்து பகுதியில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. தடுப்பணை கட்டுவதற்கான பூமிபூஜை குருவனூற்று பாலம் வண்ணான்துறை அருகே நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் பெரியாறு வைகை மதுரை கோட்ட கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், மதுரை மாநகராட்சி பொறியாளர் அரசு, மதுரை மாநகராட்சி செயற்பொறியாளர் பாக்கியலட்சுமி, பெரியாறு வைகை நீர்வள ஆதார அமைப்பு செயற்பொறியாளர் அன்புச்செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக தடுப்பணை கட்டும் இடத்தை மாற்றக் கோரியும், இத்திட்டத்தை வைகை அணையில் இருந்து செயல்படுத்தக் கோரியும் கூடலூர் முல்லைச்சாரல் விவசாய சங்கம் சார்பில் சதீஷ்குமார், செங்குட்டுவன், கொடியரசன், ஜெயபால், ஜெகன் உள்ளிட்ட விவசாயிகள், சலவை தொழிலாளர்கள் குருவனூற்று பாலம் அருகே அதிகாரிகள் வரும் பாதையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அசம்பாவிதத்தை தவிர்க்க உத்தமபாளையம் ஏஎஸ்பி ஸ்ரேயா குப்தா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.