திருப்பூர்: கோவை - சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் 7 நாட்களுக்கு சென்னை செல்லாது. காட்பாடி ரயில்வே ஸ்டேஷனுடன் திரும்பும் என சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் அறிவித்துள்ளனர். தினமும் காலை 6.15 மணிக்கு கோவையில் புறப்படும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (எண்:12680) திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, அரக்கோணம் உட்பட ஸ்டேஷன்களில் நின்று மதியம், 1.50 மணிக்கு சென்னை சென்று சேரும். மறுமார்க்கமாக மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 10.15 மணிக்கு கோவை சென்றடையும்.
இம்மாதம் நேற்று (18ம் தேதி) 24, 25 மற்றும் 31ம் தேதி, ஜூன் மாதம் 1, 7 மற்றும் 8ம் தேதி ஆகிய 7 நாட்கள் திருவாலங்காடு - அரக்கோணம் இடையே மின்வழித்தடம் மாற்றம், பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால், இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் கோவையில் இருந்து காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும். மறுமார்க்கமாக மாலை 4.20 மணிக்கு காட்பாடியில் இருந்து கோவைக்கு பயணிக்கும் என தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.