×

ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

புதுடெல்லி: ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. வரி விதிப்பில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இந்தியாவில் மிகவும் ஆக்கபூர்வமான வரி மாற்றமாக நீண்ட காலமாக கருதப்படுகிறது. இது சில மறைமுக வரிகளை உள்வாங்கி, ஜூலை 1, 2017ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது. இது நிலையான சரக்கு மற்றும் சேவை வரிக்கு மாறுவதை நோக்கமாக கொண்டுள்ளது.

சேவை மற்றும் பொருட்களை வழங்கும் வணிகங்களுக்கான வரி விதிப்பு சட்டங்களை எளிதாக்குவதே ஜிஎஸ்டியின் முக்கிய நன்மையாகும். இதனால் வரி ஏய்ப்புக்கான சாத்திய கூறுகளை கணிசமாக குறைப்பது போன்றவற்றை செய்ய இயலும். இந்த ஜிஎஸ்டியின் வகைகளாவது, மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (சிஸ்ஜிஎஸ்டி), மாநில சரக்கு மற்றும் சேவை வரி (எஸ்ஜிஎஸ்டி), ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி (ஐஜிஎஸ்டி), யூனியன் பிரதேச சரக்கு மற்றும் சேவை (யுஜிஎஸ்டி) வரியாகும்.

இந்த ஜிஎஸ்டி விதிமுறைகளை வகுப்பதற்காக தற்போது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 33 உறுப்பினர்கள் கொண்ட குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் பங்கானது, நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விகிதங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை ஜிஎஸ்டியில் இருந்து விலக்க கூடிய அதிகபட்ச வரம்பு உள்பட பல்வேறு முக்கிய பரிந்துரைகள் உள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தொடர்ந்து அதற்கான கூட்டங்கள் டெல்லி உள்பட சில மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் கலந்து கொள்வார்கள். இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும்போது பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் அதனை, மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுகிறது.

இந்த நிலையில் குஜராத்தை சேர்ந்த தனியார் அமைப்பு, அம்மாநில உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்தது. அதில், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகளை மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும் என்று கட்டாயமாக்கப்படுகிறது. இது ஏற்கக்கூடியது கிடையாது’ என்று குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்படும் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்றும்  கடல் சரக்குகள் மீதான ஒருங்கிணைந்த வரியை ரத்து செய்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் விசாரித்து கடந்த வாரம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தது. இந்நிலையில் நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகள் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகளை பொருத்தவரையில், நம்பத்தகுந்த மதிப்பு மட்டுமே உள்ளது. ஏனென்றால் இந்தியா ஒரு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாக கொண்டு இயங்கக்கூடிய நாடு.

குழப்பத்தை தவிர்க்கவே இந்திய அரசியலமைப்பு சட்டம், ஒன்றிய அரசுக்கு கூட்டாட்சி அதிகாரத்தை தருகிறது. ஜனநாயமும் கூட்டாட்சியும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் ஜிஎஸ்டி மீது சட்டம் இயற்றுவதற்கு நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் சமமான அதிகாரம் உள்ளது. அதனால் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் எந்த ஒரு பரிந்துரைகளையும் மாநில அரசுகள் அமல்படுத்தியே ஆக வேண்டும் என்று நிர்பந்திக்க கூடாது’ என தீர்ப்பு வழங்கினர்.

Tags : GST Council ,Supreme Court , GST, Council Recommendation, State Government, Supreme Court
× RELATED தேர்தல் ஆணையர்கள் நியமனத்துக்கு தடை...