கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 3வது மாதமாக தொடர்கிறது. கிழக்கு உக்ரைன் மீது கவனம் செலுத்தி வரும் ரஷ்ய படைகளுக்கு மரியுபோல் நகரம் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்நகரை சமீபத்தில் கைப்பற்றினாலும், அங்குள்ள பிரமாண்ட இரும்பாலையை கைப்பற்ற முடியவில்லை. அங்கு பதுங்கி இருந்த 2000 உக்ரைன் வீரர்கள் ரஷ்ய படைகளிடம் சண்டையிட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக ஆலையில் உள்ள உக்ரைன் வீரர்கள் ரஷ்யாவிடம் சரணடைந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 694 உக்ரைன் வீரர்கள் சரணடைந்தாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதுவரை 1000 பேர் சரணடைந்து விட்டதாகவும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கோனசென்கோவ் நேற்று அறிவித்தார். இன்னும் எத்தனை வீரர்கள் ஆலையில் உள்ளார்கள் என்ற சரியான தகவல் இல்லை. ஆனாலும், கிட்டத்தட்ட இந்த ஆலை ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் வந்ததாக கூறப்படுகிறது. எனவே முழு மரியுபோல் நகரமும் ரஷ்யா வசம் வந்துவிட்டது. சரணடைந்த உக்ரைன் வீரர்களை போர் கைதிகளாக மாற்ற ரஷ்யா திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
நேட்டோவிடம் சமர்ப்பிப்பு
நேட்டோ அமைப்பில் இணைய விருப்பம் தெரிவித்துள்ள சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள், அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, பிரஸ்ஸல்சில் உள்ள நேட்டோ தலைமையகத்தில் அமைப்பின் பொதுச்செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளனர்.