வள்ளியூர்: வள்ளியூரில் பகுதியில் சாலையை கடக்க முயன்ற 12 அடி நீளமுள்ள மலைபாம்பு மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. நெல்லை மாவட்டம் வள்ளியூர் சாமியார் பொத்தை அருகே வள்ளியூர் - ஏர்வாடி சாலையில் சுமார் 12 அடி நீளமுள்ள 40 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு ஒன்று சாலையில் ஊர்ந்து சென்றவாறு கடக்க முயன்றது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் பேரிடர் மேலாண்மை பாம்புகள் மீட்பு குழுவுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து பேரிடர் மேலாண்மை பாம்புகள் மீட்பு குழுவை சேர்ந்த அலெக்ஸ் செல்வன் மற்றும் ஷேக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் களக்காடு - முண்டந்துறை சேர்ந்த உதவி வன பாதுகாவலர் பயிற்சி வினோத் ராஜிடம் தகவல் தெரிவிக்கப்பட்டு வனக்காவலர் செல்வ மணி ராம்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் பாலமுருகன், அண்ணாதுரை முன்னிலையில் மலைப் பாம்பு ஒப்படைக்கப்பட்டது. பின்னர் மலைப்பாம்பை களக்காடு - முண்டன்துறை நம்பிக்கோவில் மலைப்பகுதியில் வனத்துறையினர் விட்டனர்.