×

வங்கி லாக்கர்களில் 156 பவுன், 2 கிலோ வெள்ளி சிக்கியது; திருச்சி தொழில் மைய பொது மேலாளர் பொறியாளரை கைது செய்ய முடிவு?: விஜிலன்ஸ் அதிரடி

திருச்சி: திருச்சி கலெக்டர் அலுவலக சாலை ராஜா காலனியில் உள்ள மாவட்ட தொழில் மையத்தில் புதிதாக தொழில் தொடங்கும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்நிலையில் கடன் வழங்க வங்கிகளுக்கு பரிந்துரை செய்ய பயனாளிகளிடம் தொழில் மைய மேலாளர் லஞ்சம் வசூலித்து வந்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. அதன்பேரில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான போலீசார் சென்று மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ரவீந்திரன் (45), உதவி பொறியாளர் கம்பன் (40) ஆகியோரிடம் விசாரித்தனர். பின்னர் அவர்களது அறைகளில் சோதனை நடத்தினர். பொது மேலாளர் ரவீந்திரனின் அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயில் அருகில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள பொது மேலாளர் ரவீந்திரன் வீட்டில் சோதனை நடத்தினர். அங்கிருந்த ரூ.6 லட்சம், 50 பவுன் நகை, ரூ.50 லட்சம் மதிப்புள்ள நில ஆவணங்கள், ரூ.50 லட்சம் மதிப்புள்ள வங்கி முதலீடு பரிவர்த்தனை ஆவணங்கள், 8 வங்கி பாஸ் புத்தகம் இருந்தது தெரியவந்தது. மேலும் திருச்சி கிராப்பட்டியில் பொது மேலாளருக்கு சொந்த வீடு உள்ளதும், அதை வாடகைக்கு விட்டதும் தெரியவந்தது. இந்நிலையில் 2வது நாளான நேற்று ரவீந்திரன் வங்கி கணக்கில் உள்ள 3 வங்கிகளின் லாக்கரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதில் 156 பவுன் நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஊழல் தடுப்பு சட்டம் 1988ன்படி 7(ஏ) மற்றும் 7(பி) ஆகிய பிரிவின்கீழ் போலீசார் வழக்குப்பதிந்தனர்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘2 நாள் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள 2 வீட்டு ஆவணங்கள் மற்றும் வங்கி கணக்கில் இருந்த ரூ.50 லட்சம், வீடு மற்றும் லாக்கரில் இருந்த நகைகள் 206 பவுன் மற்றும் 2 கிலோ வெள்ளி, அலுவலகம் மற்றும் வீடுகளில் இருந்த ரூ.9 லட்சம் ஆகியவற்றுக்கு முறையான ஆவணங்களுக்கான விளக்கம் இல்லை என்றால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சட்டப்பிரிவில் திருத்தம் செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும். தொடர் விசாரணைக்கு பிறகு 2 பேரும் கைது செய்யப்படுவர். மேலும் துறை ரீதியான விசாரணை நடத்த உயர் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது’ என்றனர்.

Tags : Trichy Business Center , bank locker, gold, silver
× RELATED டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்