ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தில் உள்ள செல்லியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முத்துப்பல்லக்கு கரகாட்டம் வாணவேடிக்கை நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு கடந்த 10ம் தேதி முதல் தினசரி அம்பாள் வீதி உலாவும் கரகாட்டம் படத்தேர் ஆகியவை நடைபெற்றது நேற்று முன்தினம் இரவு முத்துப்பல்லக்கு கரகாட்டம் வாணவேடிக்கை உள்ளிட்டவை நடைபெற்றது. முத்துப் பல்லக்கில் செல்லியம்மன், மாரியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். முத்துப்பல்லக்குடன் பூங்கரகம் வலம் வந்தது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். நேற்று மாலை மாவிளக்கு பூஜை, அய்யனார் காப்பு அணிவித்தல், சிம்ம வாகனத்தில் அம்பாள் வீதி உலா ஆகியவை நடைபெற்றது.
இன்று காலை 9 மணி முதல் 10 மணிக்குள் தேர் வடம் பிடித்தல், வீதி உலா, மற்றும் அலகு குத்தி நேர்த்திக்கடன் வீதிஉலா உள்ளிட்டவை நடைபெறுகிறது. நாளை வியாழக்கிழமை 19ம் தேதி இரண்டாம் நாள் தேர் பவனியும் ,20ம் தேதி வேஷம் ஒப்புவித்தல் திருத்தேர் கோவிலை வந்தடைகிறது. 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மஞ்சள் நீர் விளையாட்டு அம்பாள் வீதி உலாவும் நடைபெற உள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள், திருத்தேர் திருவிழா கமிட்டியினர் செய்திருந்தனர்.