பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி சுந்தரராஜப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (48). இவரது மகள் சுரேகா (17). பரமக்குடி தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். உடல்நிலை பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் திடீரென நேற்று உயிரிழந்தார். வணிகவியல் பாடத்திற்கான பொதுத்தேர்வு நேற்று நடந்த நிலையில், தனது தந்தை இறந்ததால் சுரேகா அதிர்ச்சியடைந்தார். ஆனாலும், நன்றாகப் படித்து மதிப்பெண்கள் பெற்று, நல்லவேலைக்கு செல்ல வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு, சோகத்தை மறைத்தபடி, தேர்வு எழுத பள்ளிக்கு வந்தார். மிகுந்த கவலையுடன் காணப்பட்ட சுரேகா, வணிகவியல் தேர்வை முடித்து விட்டு தந்தையின் இறுதி சடங்குக்கு சென்றார். மாணவி சுரேகாவுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள் ஆறுதல் கூறினர்.