×

பணவீக்கம், பொருளாதார வீழ்ச்சி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடை எரியும் நெருப்பில் எண்ணெய்... உடையும் ஐரோப்பிய ஒன்றியம்; விரிவடையும் நேட்டோ அமைப்பு; அடுத்தடுத்த தாக்குதலுக்கு தயாராகும் ரஷ்யா; 3ம் உலகப் போரை தூண்டுகிறதா அமெரிக்கா?

உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் மற்றொரு நாட்டின் உதவி இல்லாமல் நிலைத்து நின்றுவிட முடியாது. காரணம், அனைத்து தேவைகளையும் உள்நாட்டிலேயே பூர்த்தி செய்திட முடியாது. ஏதோ ஒரு வழியில், ஒவ்வொரு நாடும் மற்றொரு நாட்டை சார்ந்தே இருக்கிறது. உதாரணத்திற்கு நெல், கோதுமை, உணவு தானியங்கள் ஒரு பூமியில் விளையும், எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்கள் ஒரு பூமியில் உற்பத்தி செய்யப்படும், ராணுவ தொடர்பான நவீன ஆயுதங்கள், போர் விமானங்கள் போன்றவை ஒரு பூமியில் தயாரிக்கப்படும், உள்கட்டமைப்பில் சில நாடுகள் சிறந்து விளங்கும். இதுபோன்று பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். இப்படி, ஒவ்வொரு நாட்டிலும் விளையும் அல்லது உற்பத்தி செய்யும் பொருட்களை, பண்டம் மாற்று முறையிலோ அல்லது வர்த்தக ரீதியிலோ கைமாற்றி வருகின்றனர். இவ்வாறு இருந்த நாடுகளுக்கு இடையே இப்போது ஏற்றுமதி, இறக்குமதிக்கு தடை, பொருளாதார வீழ்ச்சி, பணவீக்கம் போன்ற காரணங்களால் உலகமே ஒரு அவசர நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலை ஏற்பட கொரோனாவும், போரும் தான் முக்கிய காரணம்.

2019ம் ஆண்டு இறுதியில் உலக மக்களை மரண பீதிக்கு... அல்ல.... மரணத்திற்கே கொண்டு சென்றது கொரோனா என்ற கொடிய வைரஸ். கொரோனா அலையில் சிக்கி தொழிற்சாலைகள் எல்லாம் காணாமல் போய்விட்டன. ஊரடங்கு காரணமாக தொழில்கள் முடங்கியதால் சர்வதேச விமான சேவை பாதிக்கப்பட்டது. ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அடியோடு முடங்கியது. பணப்புழக்கம் வெகுவாக சரிந்ததால், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு, பணவீக்கம் அதிரடியாக உயர்ந்தது. ஏற்றுமதி தடைப்பட்டதால், பெரும்பாலான நாடுகளில் உள்நாட்டு உற்பத்தி பெருமளவில் பாதித்தது. இதனால்,  ‘டப்பா டான்ஸ் ஆடுவது போல்’ உலக பொருளாதாரம் இந்த பக்கமும் அந்த பக்கமும் தள்ளாட்டம் கண்டு உள்ளது.

* ஐரோப்பாவும், நேட்டோவும்...
இது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் அமெரிக்காவை மையமாக கொண்டு 3வது உலக போருக்கு வழி வகுத்து உள்ளது நேட்டோ (வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு). ஐரோப்பாவில் உள்ள நாடுகள் வர்த்தகம், பாதுகாப்பு, இருநாட்டு உறவு, ராணுவ ஒப்பந்தங்கள், தொழில் வளர்ச்சி போன்ற காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ அமைப்புகள் உருவாக்கப்பட்டன. நேட்டோ அமைப்பு 1949ல் உருவாக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியம் 1993ல் உருவாக்கப்பட்டது. பனிப்போருக்கு பின் நேட்டோ அமைப்பில் நிறைய நாடுகள் சேர்ந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 27 நாடுகள் உள்ளன. நேட்டோ அமைப்பில் 31 நாடுகள் உள்ளன.

* பற்றி எரியும் உக்ரைன்
அமெரிக்கா பற்ற வைத்த நேட்டோ என்ற நெருப்பால், உக்ரைனே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. சும்மா இருந்த உக்ரைனை நேட்டோவில் சேர வற்புறுத்தியது. ரஷ்யா தன்நாட்டின் பாதுகாப்பு கருதி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இருப்பினும், அமெரிக்கா பேச்சை கேட்டு ஆடிய உக்ரைன் மீது அதிரடி போரை தொடுத்தது ரஷ்யா. இந்த போரால், கொளுத்தி போட்ட அமெரிக்காவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை. உக்ரைன்தான் சின்னாப்பின்னமாகி உள்ளது.

* உலகமே பாதிப்பு
‘குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவதுபோல...’ போரை மூட்டிவிட்டு, ரஷ்யாவுக்கு எதிராக சண்டையிட ஆயுதங்களை உக்ரைனுக்கு வாரி வழங்கி வருகிறது அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள். இதுவரை ரூ.65 ஆயிரம் கோடிக்கு ஆயுத மற்றும் அத்தியாவசிய உதவிகளை வழங்கி உள்ளது. அமெரிக்காவின் வழிகாட்டுதலில் பல்வேறு நாடுகள், ரஷ்யா மீது கடுமையாக பொருளாதார தடைகள் விதித்துள்ளன. இத்தகைய பொருளாதார தடையால், ரஷ்யாவுக்கு பாதிப்பு ஏற்பட்டதோ இல்லையா, உக்ரைன் போரால் ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டிருப்பதுதான் உண்மை.

* ரஷ்யாவின் ஆதிக்கத்தில் அடி
உணவுத் துறையை பொருத்த வரையில், உலகின் கோதுமை தேவையில் 25 சதவீதத்தை ரஷ்யாவும், 30 சதவீதத்தை உக்ரைனும் பூர்த்தி செய்து வருகின்றன. மேற்கத்திய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கோதுமையின் தேவை அதிகம். உலகின் சூரியகாந்தி எண்ணெய் தேவையில் 60 சதவீதத்தை உக்ரைன் மட்டுமே பூர்த்தி செய்கிறது. பார்லியில் 30 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்கிறது. இதுமட்டுமில்லாமல், 35 முக்கிய கனிம வளங்களை உலகுக்கே சப்ளை செய்யும் முக்கிய நாடாக ரஷ்யா இருந்து வருகிறது. பலேடியம் உள்ளிட்ட பிளாட்டினம் வகை தனிமங்களின் தாதுக்கள் மிக அரிதானவை. இதன் உலக தேவையில் 30 சதவீதத்தை ரஷ்யா பூர்த்தி செய்கிறது. இந்த பலேடியம்தான் மோட்டார் வாகன இயந்திரங்களில் வினைத்திறன் மாற்றிகளாக பயன்படுத்துப்படுகின்றன. டைட்டானியத்தில் 13 சதவீதத்தையும், நிக்கலில் 11 சதவீதமும் ரஷ்யாவிடம் இருந்தே கிடைக்கிறது. கச்சா எண்ணெய் விநியோகத்திலும் ரஷ்யா உலக அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.

* ஏற்றுமதி முடக்கம்
தற்போது போர் காரணமாக உக்ரைனின் கருங்கடல், அசோவ் கடல் பகுதி துறைமுகங்கள் வழியாக எந்த வர்த்தகமும் நடக்கவில்லை. அங்கிருந்து கோதுமை, சூரிய காந்தி எண்ணெய் வித்துக்கள் ஏற்றுமதி முழுமையாக நின்று விட்டது. ரஷ்யா மீதான தடை காரணமாக அங்கிருந்தும் பொருட்கள் ஏற்றுமதி பெரும்பாலும் தடைபட்டுள்ளது. இதன் காரணமாக, சூரிய காந்தி, பாமாயில் போன்ற எண்ணெய்களின் விலை உலகம் முழுவதும் கணிசமாக உயர்ந்துள்ளது.

* தள்ளாடும் நாடுகள்
அமெரிக்காவில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு உணவுப் பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் தினசரி பெட்ரோல் விலை உயர்வு வாடிக்கையாகி உள்ளது.  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரிட்டனில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இந்தியாவி லும் பணவீக்கம் எகிறி உள்ளது.

* பொருளாதாரம் 35% சரியும்
ஐரோப்பிய நாடுகளின் 39 சதவீத மின்சார தேவையை ரஷ்யாதான் பூர்த்தி செய்கிறது. ஐரோப்பிய நாடுகளின் முக்கிய எரிவாயு சப்ளை நாடாகவும் ரஷ்யா திகழ்கிறது. இவை இரண்டுக்குமே ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளதால் தற்போது அங்கு மின்சாரம், எரிவாயு விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல், நிலக்கரிக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உக்ரைன்-ரஷ்யா போரால், சர்வதேச பொருளாதார வளர்ச்சி 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை வீழ்ச்சியை சந்திக்கும் என்று ஐஎம்எப் எச்சரித்துள்ளது.

* போட்டி தடை
இந்த சூழ்நிலையில், ரஷ்யா, உக்ரைனுக்கு அடுத்தபடியாக கோதுமை ஏற்றுமதியில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. தற்போது, இந்தியாவில் கோதுமை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜெர்மனி உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. இதேபோல், ‘ஏழைகளின் நெய்’ என்று கூறப்படும் பாமாயிலை ஏற்றுமதி செய்ய இந்தோனேசியா தடை விதித்துள்ளது. இவ்வாறு, ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு அடுத்த நிலையில் உள்ள நாடுகள் தங்களின் பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதித்து வருவது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

* ராஜதந்திரத்தில் தவிப்பு
உலகமே ஓர் ஆட்டம் கண்டுள்ள நிலையில், நேட்டோ அமைப்பில் சேர ரஷ்யாவின் அண்டை நாடான பின்லாந்து மற்றும் சுவீடன் விருப்பம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவை ஒட்டி உள்ள நாடுகள் அடுத்தடுத்து நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளது, அமெரிக்கா மீது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. உலகின் பலமிக்க ராணுவம் மற்றும் ஆயுதங்களை கொண்ட அமெரிக்கா, நேரடி போட்டியை சந்திக்க முடியாமல் கோழைத்தனமாக நேட்டோ என்ற ஆயுதத்தை பயன்படுத்தி அப்பாவி மக்களின் உயிரை கொன்று குவிக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது. உலக நாடுகள் போர் நிறுத்த பல முயற்சிகளை எடுத்து வரும் நிலையில், உக்ரைனுக்கு ஆயுதங்களை வாரி வழங்குவதும் இல்லாமல், போரில் நிச்சயம் உக்ரைனுக்குதான் வெற்றி என்ற பிம்பத்தை உருவாக்குகிறது அமெரிக்கா. இது, எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தும் என உணராமல் பல நாடுகள் அமெரிக்காவின் ராஜதந்திரத்தில் சிக்கி பலிகடாவாகி வருகின்றன.

* அடுத்தடுத்து போர்
நேட்டோ இணைய விருப்பம் தெரிவித்துள்ள பின்லாந்து, சுவீடனுக்கு ரஷ்யா பகிரங்கமாகவே எச்சரிக்கை விடுத்துள்ளது. சுவீடன் வான் பரப்பில் ரஷ்யா போர் விமானங்கள் பறந்து, போருக்கான முதல் மணியை அடித்து காட்டி உள்ளது. இதை மீறியும் நேட்டோ இணைவதற்கான முறையான சேர்க்கையில் சுவீடன் கையெழுத்திட்டு உள்ளது.  பின்லாந்து, நேட்டோ தலைமையகத்தில் இந்த வாரம் பின்லாந்து சமர்ப்பிக்க உள்ளது. இதனால், பின்லாந்துக்கான மின்சார விநியோகத்தை ரஷ்யா நிறுத்திவிட்டது. இந்த இரு நாடுகள் மீது ரஷ்யா விரைவில் போர் தொடுக்க ஆயுத்தமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், ஐரோப்பிய ஒன்றியம் சரிந்து, நேட்டோ அமைப்பின் கை ஓங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ‘எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல்...’ அமெரிக்காவின் ராஜ தந்திரத்தால், 3ம் உலகப்போர் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

* இலங்கையே சாட்சி
கொரோனா ஊரடங்கு, தவறான பொருளாதார கொள்கை போன்ற காரணங்களால் கடும் பொருளாதார நெருக்கடி சிக்கி இலங்கையில் தற்போது பிரதமரே பதவி விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இங்கு உணவு, மின்சாரம், எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏதுவுமே இல்லை...இல்லை...இல்லை... தேர்வு, தேர்தல் நடத்த கூட மை, பேப்பர் இல்லை. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அண்டை நாடுகளிடமும், சர்வதேச நிதியத்திடமும் கையேந்தி நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கும் இலங்கை ஏர்லைன்சை, தனியாருக்கு தாரைவார்க்க இலங்கையின் புதிய பிரதமர் ரணில் திட்டமிட்டுள்ளார். தவறான பொருளாதார கொள்கையால், நாடே சீரழியும் என்பதற்கு இலங்கையே சாட்சி.

* கலகமூட்டி அமெரிக்கா
ஐரோப்பிய நாடுகள் எரிவாயு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு ரஷ்யா மற்றும் உக்ரைனை நம்பியே உள்ளது. உலகில் டாலரின் மதிப்புதான் அதிகமாக உள்ளது. சமீப ஆண்டுகளாக சீனா, ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, அமெரிக்காவின் கண்ணை உறுத்தி கொண்டு இருக்கிறது. ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் தங்களின் நாடுகளின் ரூபாய் மதிப்பை உலக அளவில் டாலருக்கு நிகராக கொண்டு வர முயற்சித்து வருகின்றன. இதை பொறுத்து கொள்ள முடியாத அமெரிக்கா, கலகமூட்டி வேலையை பார்த்து உள்ளது.

* வட்டி உயர்வால் சரிகட்ட முயற்சி
உலக நாடுகளை அதிகம் பாதித்து உள்ள பணவீக்கத்தில் இருந்து மீண்டு வர பல்வேறு முயற்சிகளை எடுத்தாலும், ரஷ்யா-உக்ரைன் போர், கொரோனா தொற்று, கச்சா எண்ணெய் விலை உயர்வு, மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால் குறைக்க முடியவில்லை. இதனால், பணப்புழக்கத்தை குறைக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும்  வட்டி விகிதத்தை உயர்த்தும் முடிவை உலக நாடுகள் எடுத்துள்ளன. அதன்படி, அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் வங்கி,  பென்ச்மார்க் வட்டியை 0.50 % வட்டியை உயர்த்தி உள்ளது. இதேபோல், பணவீக்கத்தை குறைக்கவும் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்கவும் ரெப்போ வட்டி விகிதத்தை 4 சதவீதத்தில் இருந்து 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. பணவீக்கத்தின் இழப்புகளை வட்டியாக உயர்த்தி மக்கள் தலைமையில் பெரிய அடி அடித்து உள்ளது அமெரிக்கா மற்றும் இந்தியா.

* நேட்டோ அமைப்பு 31 நாடுகள்: பனிபோருக்கு முன்பு இணைந்த நாடுகள்
1949
பெல்ஜியம்
கனடா
டென்மார்க்
பிரான்ஸ்
ஐஸ்லாந்து
இத்தாலி
லக்சம்பர்க்
நெதர்லாந்து
நார்வே
போர்ச்சுகல்
பிரிட்டன்
அமெரிக்கா
1952
கிரீஸ்
துருக்கி
1955
மேற்கு ஜெர்மனி
1982
ஸ்பெயின்
பனிப்போருக்கு
பின் இணைந்த
நாடுகள்
1996
ஜெர்மனி
1999
செக் குடியரசு
ஹங்கேரி
போலந்து
2004
பல்கேரியா
இஸ்டோனியா
லாத்வியா
லிதுவேனியா
ருமேனியா
ஸ்லோவேக்கியா
ஸ்லோவேனியா
2009
அல்பேனியா
குரோஷியா
2017
மாண்டினெக்மே
2020
நோனித் மாசிடோனிக்

* ஐரோப்பிய ஒன்றியம்: 27 நாடுகள்
1. ஆஸ்திரியா
2. பெல்ஜியம்
3. பல்கேரியா
4. குரோஷியா
5. சைப்பிரஸ்
6. செக் குடிaயரசு
7. டென்மார்க்
8. எஸ்டோனியா
9. பின்லாந்து
10. பிரான்ஸ்
11. ஜெர்மனி
12. கிரீஸ்
13. ஹங்கேரி
14. அயர்லாந்து
15. இத்தாலி
16. லாத்வியா
17. லித்துவேனியா
18. லக்சம்பர்க்
19. மால்டா
20. நெதர்லாந்து
21. போலந்து
22. போர்ச்சுகல்
23. ருமேனியா
24. ஸ்லோவாக்கியா
25. ஸ்லோவேனியா
26. ஸ்பெயின்
27. சுவீடன்

* என்ன பலன்?
2ம் உலக போருக்கு பின் சோவியத் யூனியனின் அச்சம் காரணமாக வடக்கு அட்லாண்டிக் பகுதியை பாதுகாக்கும் வகையில் நோட்டோ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் உறுப்பினராக உள்ள எந்த ஒரு நாட்டின் மீது மற்ற நாடுகள் போர் தொடுத்தால், நேட்டோ உறுப்பு நாடுகள் அனைத்தும் ஓரணியாக சேர்ந்து எதிரி நாட்டை தாக்க வேண்டும் என்பதுதான் நேட்டோ அமைப்பின் ஒப்பந்தம். தற்போது, ரஷ்யாவை சுற்றி உள்ள நாடுகள் நேட்டோ இணைந்தால், அதன் மூலம் பிரச்னைகளை உருவாக்கி, நேட்டோ நாடுகள் மூலம் போரை தொடுக்க கூடும் என்பதால், ரஷ்யா தொடர்ந்து எதிர்க்கிறது.

ஐரோப்பிய யூனியனில் 447.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் முக்கிய வர்த்தக பங்காளியாக அமெரிக்கா உள்ளது. எந்தவொரு உறுப்பு நாடுகளும் அதன் சொந்த அரசியலமைப்பு தேவைகளுக்கு ஏற்ப யூனியனில் இருந்து விலகவோ வெளியேறவோ முடிவு செய்யலாம். ஐரோப்பிய யூனியனில் அங்கத்துவம் வகிக்கும் எந்தவொரு நாட்டின் குடிமகனும் வேலை அனுமதியோ அல்லது விசாவோ இல்லாமல் அதன் 27 உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒன்றில் எந்தக் கட்டுப்பாடும் இன்றி சுதந்திரமாக வாழவும் வேலை செய்யவும் முடியும். அதே வழியில், ஓர் உறுப்பு நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள்கள் வேறு எந்த உறுப்பு நாட்டிலும் எந்த சிறப்பு அனுமதிகளோ அல்லது கூடுதல் வரிகளோ இல்லாமல் விற்கப்படலாம்.

Tags : EU ,NATO ,Russia ,US ,World War III , Inflation, economic downturn, ban on exports and imports, oil on fire ... Breaking EU; Expanding NATO system; Russia preparing for next attack; Is US triggering World War III?
× RELATED பூச்சிக் கொல்லி மருந்து அதிகம் இந்திய...