×

புதுகை அருகே கணவருடன் தகராறில் பயங்கரம் கழுத்து நெரித்து 2 குழந்தைகள் கொலை; கொடூர தாய் கைது

பொன்னமராவதி: புதுக்கோட்டை அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறில், கழுத்தை நெரித்து 2 குழந்தைகளை கொன்ற கொடூர தாய் கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கருப்பர்கோவில்பட்டியை சேர்ந்த கனகராஜ் மகன் பொன்னடைக்கன் (28). பொள்ளாச்சியில் உள்ள தேங்காய் மண்டியில் வேலை பார்க்கிறார். இவரது மனைவி பஞ்சவர்ணம் (21). இருவரும் காதல் தம்பதியர். 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். ஜெகதீசன் (2), தக்‌ஷியா (8 மாதம்) என்ற மகன், மகள் இருந்தனர். பொன்னடைக்கன், அவ்வப்போது ஊருக்கு வருவார். அவரிடம் ‘வீடு கட்ட வேண்டும்’ என்று நீண்ட நாட்களாகவே பஞ்சவர்ணம் கூறி வந்தார்.

இந்நிலையில் குடிப்பழக்கம் உள்ள பொன்னடைக்கன், சம்பாதிக்கும் பணத்தை குடிப்பதற்கே அதிகளவில் செலவழித்து வந்தார். இதனால் தம்பதி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்னையானது. இந்நிலையில் பொன்னடைக்கன், ஊர் திருவிழாவை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்தார். நேற்று அதே பகுதியில் உள்ள மாமியார் வீட்டுக்கு மனைவி, பிள்ளைகளுடன் பொன்னடைக்கன் சென்றார். அங்கும் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. மனைவியை சமானப்படுத்தி தனது வீட்டுக்கு அழைத்து வந்தார். அங்கும் தகராறு முற்றியது. இதனால் ேகாபத்தில் பொன்னடைக்கன் வெளியே சென்று விட்டார். அவரை வீட்டுக்கு வரும்படி செல்போன் மூலம் பஞ்சுவர்ணம் அழைத்தார். அப்போது, ‘வீட்டுக்கு வராவிட்டால் குழந்தைகளை கொன்று விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார். ஆனாலும் அவர் வரவில்லை.

இதனால் விரக்தியடைந்த பஞ்சவர்ணம், தனது 2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு வெளியே வந்தார். பின்னர், பக்கத்து வீட்டில் வசிக்கும் சின்னு என்பவரின் செல்போனை வாங்கி, தனது தாய் சின்னுபிள்ளைக்கு போன் செய்து, 2 குழந்தைகளையும் கழுத்தை நெரித்து கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் சிறிது நேரத்தில் பஞ்சவர்ணமும் தற்கொலை செய்யும் நோக்கத்தோடு வீட்டை விட்டு சென்றார்.

இதை கேட்டதும் அதிர்ச்சியடைந்த சின்னுபிள்ளை மற்றும் பொன்னடைக்கன் ஆகியோர் வீட்டுக்கு வந்தனர். குழந்தைகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து கதறினர். மேலும் அப்பகுதியினர், பஞ்சவர்ணத்தை மீட்டு, பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். டிஎஸ்பி அப்துல் ரகுமான் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். தொடர்ந்து இரு குழந்தைகளின் உடல்களையும்  பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து பஞ்சவர்ணத்தை கைது செய்து பொன்னடைக்கனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்ற குழந்தைகளை தாயே கழுத்தை நெரித்து கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Pudukkottai , Rebellion, with husband, in dispute, terrible
× RELATED வேங்கைவயல் மக்கள் தேர்தல் புறக்கணிப்பு