நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டரை ஆண்டுகளுக்குள் 10 லட்சமானது. சீனாவின் வுகான் நகரில் இருந்த கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரசுக்கு உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 64 ஆயிரத்து 178 பேர் பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 10 லட்சம் பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க தேசிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் மற்றும் தேசிய சுகாதார புள்ளிவிவர மையம் ஆகியவற்றின் கூட்டறிக்கையில், அமெரிக்காவில் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்குள் 9,99,607 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இது, அமெரிக்க உள்நாட்டு போர், 2ம் உலகப் போர் ஆகிய இரண்டிலும் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கையை கொண்டது. கடந்த 2021 ஜனவரியில் இருந்து, அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை சராசரியாக 300லிருந்து 3,400 வரை பதிவாகி உள்ளது. தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் கொரோனா தொற்றினால் உயிரிழப்பதற்கு 10 மடங்கு கூடுதல் வாய்ப்புள்ளதாக அந்நாட்டின் தேசிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.