சென்னை: தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் ‘இல்லம் தேடி கல்வி’ குறித்த செயல்பாடுகளை ஆய்வு செய்ய கேரளா, குஜராத், மஹாராஷ்டிரா, ஹரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஐஏஎஸ் பயிற்சி முடித்தவர்கள் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலம், எம்ஜிஆர் நகர், இருளர் பகுதி, ஆனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 60 பேர் பல்வேறு குழுக்களாக பிரிந்து பார்வையிட்டனர். அதில், கொத்திமங்கலம் இருளர் இன மக்கள் மற்றும் நரிக்குறவர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் இயங்கி வரும் இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு சென்ற ஐஏஎஸ் பயிற்சி முடித்த குழுவினருக்கு நரிக்குறவர் இன மக்கள் பாசி மணி, ஊசி மணி அணிவித்து மேள, தாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். பெண் ஐஏஎஸ் பயிற்சி முடித்தவர்கள் நரிக்குறவர் பெண்களுடன் சேர்ந்து கரகாட்டம் ஆடினர்.