×

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என்னைக் கொல்ல சதி நடக்கிறது : பாகிஸ்தான் மாஜி பிரதமர் இம்ரான் அலறல்

இஸ்லாமாபாத் : உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் என்னைக் கொல்ல சதி நடக்கிறது என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்தார். பாகிஸ்தானில் கடந்த மாதம் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது  அப்போதைய பிரதமர் இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. தனது அரசை கவிழ்த்ததின்  பின்னணியில், அமெரிக்கா உள்ளதாக கூறினார். தற்போது அவர் பாகிஸ்தானின்  பல்வேறு நகரங்களில் பேரணிகளை நடத்தி வருகிறார்.

அதேநேரம் புதிய அரசு  குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நேற்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ‘பாகிஸ்தானிலும், வெளிநாடுகளிலும் என்னைக் கொல்ல சதி நடக்கிறது. இந்த சதி குறித்து எனக்கு முன்பே தெரியும். இதுதொடர்பாக வீடியோ பதிவும் வைத்துள்ளேன். அதில் சதியின் பின்னணியில் உள்ள அனைவரின் பெயர்களையும் தெரிவித்துள்ளேன். நான் இறந்த பின்னர், இந்த வீடியோ வெளி உலகிற்கு பகிரங்கப்படுத்தப்படும்’ என்றார்.

இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறுகையில், ‘இம்ரான் கான் படுகொலை செய்யப்பட்டதாக பொய்யான செய்திகளை வெளியிட்டு, அதனால் சாமானியர்களின் அனுதாபத்தை பெற வேண்டும் என்று கூறியுள்ளார். நான்கு ஆண்டுகள் அவர் ஆட்சியில் இருந்தும், இவரால் எதையும் செய்யமுடியவில்லை. இப்போது அமெரிக்காவும் வேறு சிலரும் தன்னைக் கொல்ல சதி செய்கிறார்கள் என்கிறார். பாகிஸ்தான் அரசியலில் இவருக்கு இடமில்லை. அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தனது கட்சியை பலப்படுத்த இவ்வாறு பேசிவருகிறார்’ என்றார்.



Tags : Imran , Pakistan, former, Prime Minister, Imran
× RELATED சிறையில் உள்ள இம்ரானுடன் மனைவி சந்திப்பு