திருமயம் : திருமயம் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஆதனூர் செங்கமலவள்ளி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது . இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 21 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.
பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 7 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் முதல் பரிசை மாவூர் தேவதரணி மற்றும் அழகாபுரி லத்தீபா ஆகியோரது மாடுகள் தட்டிச்சென்றது. 2ம் பரிசை நாட்டாணி சூர்யா, 3ம் பரிசு நரசிங்கம்பட்டி மலையாண்டி ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசு கானாடுகாத்தான் ஆர்எஸ் கோழிக்கடை, 2ம் பரிசை துலையானூர் பாஸ்கரன், 3ம் பரிசு குளத்துப்பட்டி சாமி சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற நேமத்தான்பட்டி- கோனாபட்டு சாலையில் இருபுறமும் மக்கள் திரண்டு வந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர்.