திருவள்ளூர்: திருவள்ளூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) ச.சுதா அறிக்கையில் கூறியிருப்பதாவது; திருவள்ளூர் மாவட்டத்தில் 20 மற்றும் அதற்கு மேல் பணியாளர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பு கொள்கைகளை மாற்றுதிறனாளிகள் உரிமை சட்டம், 2016ன் படி உருவாக்க வேண்டும். அவர்களுக்கான பணியிடங்களை கண்டறிந்து குறைந்தது 5 சதவீதம் பணி வாய்ப்பு மற்றும் நியமனம் வழங்க வேண்டும்.
20 பேருக்கு மேல் பணியாளர்களை பணியமர்த்தி உள்ள அனைத்து நிறுவனங்களிலும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவரங்களையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் இணையதளத்தில் உள்ள கூகுள் சீட் படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். அதை இரு நாட்களில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையருக்கு அனுப்ப வேண்டும். தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் ஆய்வின்போது மாற்றுத்திறனாளிகள் நிறுவனங்களை அணுகுவதற்கான சாய்வுதளம், வாகனம் நிறுத்துமிடம், கழிப்பறை போன்ற வசதிகள் உள்ளதை உறுதி செய்யவேண்டும்.
அவ்வாறு இல்லாவிட்டால் ஆய்வறிக்கையை பூர்த்தி செய்து அந்த நிறுவனத்திற்கு வழங்கும் ஆய்வு உத்திரவில் இதை தெரியப்படுத்த வேண்டும். அதிக மாற்றுத்திறனாளிகளுக்கான பணியிடங்களை கண்டறிந்து, அவர்களை பணியமர்த்தி உள்ள நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.