×

வேலூர் மாவட்டத்தில் உள்ள அறநிலையத்துறை கோயில்களில் அமைச்சர்கள் ஆய்வு-சீரமைப்பு பணிகளுக்கு உத்தரவு

வேலூர் : வேலூர் மாவட்டத்தில் உள்ள அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களில் நடந்து வரும் பணிகளை அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர் காட்பாடி குமரப்பா நகர் சுந்தரியம்மன் கோயில் ₹72 லட்சத்தில் திருப்பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை நேற்று தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், எம்பிக்கள் ஜெகத்ரட்சகன், கதிர்ஆனந்த், எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமார் ஆகியோர் ஆய்வு ெசய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து அவர் சுவாமி தரிசனம் செய்தார்.

அதேபோல் காட்பாடி தாராபடவேடு வரதராஜபெருமாள் கோயிலிலும் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். அப்போது பக்தர்கள் பழமையான கட்டிடம் பழுதடைந்துள்ளது. அதற்கு நிதி ஒதுக்கீடு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளவேண்டும். பல ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிகேஷகம் மேற்கொள்ளப்பட்டது. எனவே கோயிலை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ஆய்வின்போது  கலெக்டர் குமாரவேல் பாண்டியன், மேயர் சுஜாதா, துணை மேயர் சுனில்குமார், மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா, பகுதி செயலாளர் வன்னியராஜா, அறநிலையத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.தொடர்ந்து பொன்னையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அனந்த பத்மநாபசுவாமி கோயிலில் நடந்து வரும் புனரமைப்பு பணிகளை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கெண்டார். இக்கோயிலில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்து, தற்போது சுற்றுச்சுவர் சிதிலமடைந்து காணப்பட்டது.

திமுக ஆட்சி அமைந்தவுடன் இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கனிமம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தார்.இதைத்தொடர்ந்து  அமைச்சர் துரைமுருகன்  கூறுகையில், ‘பொன்னை பெருமாள் கோயில் ஓராண்டுக்குள் புனரமைக்கப்பட்டு  கும்பாபிஷேகம் நடைபெறும்’ என்றார். இதையடுத்து வள்ளிமலை சுப்பிரமணிய  சுவாமி கோயிலில் சரவண பொய்கை தெப்பக்குளத்தை பார்வையிட்டு, கோபுரங்கள்  சீரமைக்கும் பணியை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர்கள்  உத்தரவிட்டனர்.

இதையடுத்து கே.வி.குப்பம் அடுத்த மகாதேவமலை கோயிலை நேற்று அமைச்சர்கள் சேகர்பாபு, துரைமுருகன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது கோயில் தொடர்பாக மகானந்த சித்தரிடம் கேட்டறிந்தனர். இந்நிகழ்ச்சிகளில் எம்பிக்கள் கதிர்ஆனந்த், ஜெகத்ரட்சகன், ஏ.பி.நந்தகுமார் எம்எல்ஏ, கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எஸ்பி ராஜேஷ் கண்ணன், ஆர்டிஓ பூங்கொடி, தாசில்தார் சரண்யா, காட்பாடி ஒன்றிய குழு சேர்மன் வேல்முருகன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ரமேஷ்  திமுக ஒன்றிய செயலாளர் கவுன்சிலர் ரவி மற்றும் அறநிலைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Ministers ,Vellore district , Vellore: Ministers Sekarbabu,
× RELATED முன்னாள் பிரதமர்கள் நாட்டின்...