×

5,529 காலி பணியிடங்கள் உள்ள குரூப் 2 பதவிக்கு வரும் 21ம் தேதி முதல் நிலை தேர்வு: 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர்

சென்னை: குரூப் 2, குரூ 2ஏ பதவியில் காலியாக உள்ள 5,529 காலி பணியிடங்களுக்கு வருகிற 21ம் தேதி முதல் நிலை தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 11.78 லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகளில் டிஎன்பிஎஸ்சி மும்முரமாக ஈடுபட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப்-2, 2ஏ பணிகளில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த பிப்ரவரி  23ம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பதவி(நேர்முக தேர்வு பதவி) 116 பணியிடம். குரூப் 2ஏ(நேர்முகத் தேர்வு அல்லாத பதவி) பதவியில் 5,413 இடங்கள் என மொத்தம் 5,529 காலி பணி இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

விண்ணப்பிக்க ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த தேர்வுக்கு 11 லட்சத்து 78 ஆயிரத்து 175 பேர் விண்ணப்பித்தனர். இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று போட்டிபோட்டு விண்ணப்பித்தனர். இது டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் புதிய சாதனை. இந்த நிலையில் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான முதல்நிலை தேர்வு வருகிற 21ம் தேதி(சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 4,012 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வில் பங்கேற்பவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. தேர்வு நடைபெறும் மையங்களில் அதிரடி சோதனை நடத்தவும் டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.

Tags : Group 2 , With 5,529 vacancies, Group 2 posts will be filled on the 21st.
× RELATED 5,990 காலி பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட...