திருவள்ளூர்: பெரியார் நினைவு சமத்துவபுர திட்டத்தில் அமைத்த வீடுகள் பெற விரும்புவோர், விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை.
திருவள்ளுர் மாவட்டம், பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சியில் பெரியார் நினைவு சமத்துவபுரம் திட்டத்தின் மூலம் கட்டி முடித்து, சீரமைக்கப்பட உள்ள 100 வீடுகளுக்கு குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் தேர்வு செய்ய பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். இதில், நலிவடைந்த குடும்பங்கள், மாற்றுத்திறனாளிகள், விதவைகள், ஆதரவற்றோர், கைவிடப்பட்ட பெண்கள், பெண்கள் தலைமையிலான குடும்பங்கள், முன்னாள் ராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற துணைப்படை உறுப்பினர்கள், கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குடும்பங்கள், திருநங்கைகள், எச்ஐவி, டிபி நோயாளிகள், சுகாதார துறை துணை இயக்குநரால் சான்றளிக்கப்பட்டவர்கள், குடும்பத்தில் மன வளர்ச்சி குன்றியவர்கள், தீ வெள்ளம் உள்பட இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுடன், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சி, சமத்துவரபுரம் கிராமத்தின் அருகில் உள்ள கிராமங்களில் இருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இதற்கான விண்ணப்பங்கள் வரும் 19ம் தேதி வரை அலுவலக வேலை நாட்களில் சம்பந்தப்பட்ட ஒன்றிய அலுவலகத்தில் அளிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.