மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியம், கினார் கிராமத்தில். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை, எம்பி செல்வம் திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம் கினார் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். அவர்கள், நிலத்தில் விளைவித்த நெல் மூட்டைகளை, இடைத்தரகர்கள் இல்லாமல் அரசு நேரடியாக கொள்முதல் செய்யவேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி, விவசாயி கள் பயன்பெறும் வகையில், அதே கிராமத்தில் அரசு சார்பில், நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் தேவி அரசு தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு உறுப்பினர் லதா மனோகரன் முன்னிலை வகித்தார். கொள்முதல் நிலைய அலுவலர் செந்தில்நாதன் வரவேற்றார். எம்பி செல்வம் கலந்து கொண்டு, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, விவசாயிகளிடம் நெல் கொள்முதலை தொடங்கி வைத்தார். இதில், மாவட்ட ஊராட்சி குழு பெருந்தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மதுராந்தகம் தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்.சிவகுமார், திமுக நிர்வாகிகள் அரசு, வெங்கடேசன், ஜெய்சங்கர், ரோக்தும்மா, தேவாதூர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.