சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அவரது கட்சியினருக்கு எழுதியுள்ள கடிதம்: பாமக தலைவராக ஜி.கே.மணி பொறுப்பேற்று 25 ஆண்டுகள் ஆகிறது. எனவே, அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படவிருக்கிறது. ஜி.கே.மணி அரசியலுக்கு வருவதற்கு முன் அடிப்படையில் ஓர் ஆசிரியர். பாமக தொடங்குவதற்கு முன்பாகவே நமக்கு கிடைத்த முதல் மக்கள் பிரதிநிதி என்ற பெருமையும் மணிக்கு உண்டு. கலைஞர், எம்.ஜி.ஆரில் தொடங்கி இன்று மு.க.ஸ்டாலின் வரை கடந்த 50 ஆண்டுகளில் தமிழக முதலமைச்சராக இருந்த அனைத்து தலைவர்களுடனும் ஜி.கே. மணிக்கு அறிமுகம் உண்டு. பாமக தலைவர் பதவியில் ஜி.கே.மணியின் வெள்ளிவிழா ஆண்டை கொண்டாடும் வகையில், வரும் 24ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் உள்ள அண்ணா அரங்கத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படவிருக்கிறது.