சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: அரசியல் வரலாற்றில் எத்தனையோ அரசியல் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள். தடம் பதித்து இருக்கிறார்கள். சாதனை புரிந்திருக்கிறார்கள். வரலாறு படைத்திருக்கிறார்கள். ஆனால், வரலாறாகவே வாழ்ந்தவர் ஜெயலலிதா. அவர் வாழ்ந்த இடமான போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையத்தை அதிமுக தொண்டர்கள் கோயிலாக பூஜித்தனர். அந்த வேதா நிலையத்திற்கு இன்று பொன் விழா என்பதையறிந்து என் மனம் பூரிப்படைகிறது. இன்று நான் தமிழக மக்களால் பேசப்படுகிறேன், இந்திய மக்களால் நன்கு அறியப்படுகிறேன் என்றால் அதற்கு காரணம் ஜெயலலிதா தான். என் வாழ்நாளில் மறக்க முடியாத இடம் வேதா நிலையம். என்னை இந்த நாட்டிற்கு அடையாளம் காட்டிய ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்திற்கு நான் பலமுறை சென்று வந்ததையும்; அங்கேயிருந்து அவரின் அறிவுரைகளையும், வேதா நிலையத்தின் பொன் விழா நாளான இன்று நினைத்துப் பார்க்கிறேன்.