காலாப்பட்டு: உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் குதிரை ஜெர்சி (86). கடந்த 1985ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மொழி துறையில் ரஷ்ய மொழி பயிற்றுநராக பணியாற்றியுள்ளார். மேலும் அவர் ஆரோவில் சர்வதேச நகரத்தில் தங்கி இருந்தாராம். இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பெங்களூரு சென்ற குதிரை ஜெர்சி, புதுச்சேரி திரும்பியுள்ளார். அப்போது அவரது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்கள் அடங்கிய பையை யாரோ திருடி சென்றுவிட்டனர். இதையடுத்து அவர் ஆரோவில் மற்றும் கோட்டக்குப்பம் காவல் நிலையங்களில் புகார் அளித்தும், உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.
இந்த நிலையில் குதிரை ஜெர்சி கடந்த 10 நாட்களாக கோட்டக்குப்பம் அடுத்த பெரிய முதலியார்சாவடி முத்து மாரியம்மன் கோயில் குளக்கரை அருகே உள்ள நாடக மேடையில் அமர்ந்து எனக்கு உதவி வேண்டும் என தகவல் பலகை வைத்தபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். எனவே விழுப்புரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக அவர் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.