சென்னை: சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் கடந்த மாதம் 18ம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக எழுந்த குற்றச் சாட்டினால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. மேலும், உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகீயோரை பணியிடை நீக்கம் செய்து டிஜிபி உத்தர விட்டார், மேலும் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது, அதன் பின்பு விக்னேஷின் உடலில் 13 இடங்களில் தாக்கிய காயங்கள் இருந்ததாக பிரேதப் பரிசோதனை முடிவில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது, இதனை தொடர்ந்து சிபிசிஐடி நடத்திய விசாரணையில் விக்னேஷ் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்ததையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து காவலர் பவுன்ராஜ், ஊர்காவல் படையை சேர்ந்த தீபக், காவலர்கள் முனாஃப் , குமார், சந்திரகுமார், ஜெகஜீவன் ஆகிய 6 பேரை சிபிசிஐடி போலீசார் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதற்கிடையில் ஏற்கனவே தேசிய மனித உரிமை ஆணையம் விக்னேஷ் வழக்கு தொடர்பாக நான்கு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது.இந்நிலையில் விக்னேஷ் கொலை வழக்கு தொடர்பாக தலைமை செயலக காவல் ஆய்வாளர் செந்தில் குமார், தென் மண்டல காவல் துறைக்கு மாற்றம் செய்தும், அயனாவரம் உதவி ஆணையர் சரவணன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்தும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தர விட்டுள்ளார்.