புதுச்சேரி: புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஒன்றிய அரசின் ஜிப்மர் மருத்துவமனையில் அனைத்து பதிவேடுகளும் இந்தி மொழியில் மட்டுமே இருக்க வேண்டும் என அதன் இயக்குநர் சமீபத்தில் சுற்றறிக்கை வெளியிட்டு இருந்தார். இதை கண்டித்து திமுக, காங்கிரஸ், பாமக, விசிக மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இப்பிரச்னை அடங்குவதற்குள் மீண்டும் ஒரு பிரச்னை எழுந்துள்ளது.புதுச்சேரி ஒயிட்டவுன் பகுதியில் செஞ்சி, ஆம்பூர் சாலைக்கு இடைப்பட்ட வீதிகளின் சந்திப்புகளில் சுற்றுலாத்துறையின் கீழ் வழிகாட்டி பெயர்பலகை தமிழ், ஆங்கிலத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக, நீலநிறத்தில் வைக்கப்படும் பெயர் பலகைகளுக்குப் பதிலாக இவை, காவி நிறத்தில் வைக்கப்பட்டுள்ளது அப்பகுதியினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நேற்று முன்தினம் இரவு இந்த பெயர் பலகைகளை 2 மர்ம நபர்கள் கருப்பு மை பூசி அழித்தனர். மேலும், பெருக்கல் குறியீடுகளை இட்டனர். இதனை அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் பார்த்து, ஏன் இப்படி செய்கிறீர்கள்? என கேட்டுள்ளனர். பாஜ கூட்டணி ஆட்சி நடப்பதால் காவி நிறத்தில் பெயர் பலகை வைத்துள்ளனர். அதனால் அழிக்கிறோம் என கூறி விட்டு சென்றுள்ளனர்.