செங்கம்: தமிழக அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ள 500 டன் ஆவின் பால் பவுடர் தயாரிக்கும் பணி, செங்கம் அடுத்த அம்மாபாளைம் ஆவின் பால் பவுடர் ஆலையில் தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியை அமைச்சர் ஆவடி நாசர் நேரில் ஆய்வு செய்தார்.இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் ₹15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் அனுப்பி வைக்கப்பட உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அம்மாபாளையம் ஊராட்சியில் உள்ள ஆவின் பால் பவுடர் தயாரிக்கும் தொழிற்சாலையில், இலங்கை மக்களுக்காக அனுப்பி வைக்க வேண்டிய பால் பவுடர் தயாரிக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது.
இந்த பணிகளை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி மு.நாசர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, பால் பவுடரை உரிய தரத்தில் தயாரித்து, பாதுகாப்புடன் பேக்கிங் செய்து அனுப்பி வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது, சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் பா.முருகேஷ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.