*50 ஆயிரம் மலர்களால் பல்வேறு அலங்காரங்கள்
இதனை காண பல லட்சம் சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கம். சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில், பல்வேறு மலர் அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. கடந்த வாரம் கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி முடிந்த நிலையில், நேற்று கூடலூரில் வாசனை திரவிய பொருட்களின் கண்காட்சி துவங்கியது. இது 3 நாட்கள் நடக்கிறது.
இது தவிர வெளி மாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலைத்துறையினர் 10க்கும் மேற்பட்ட குடில்களில் பல வகையான மலர் அலங்காரங்களை மேற்கொண்டுள்ளனர். மேலும், ரோஜா இதழ்களை கொண்டு பல்வேறு அலங்காரங்களும், ரங்கோலிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பூங்காவில் உள்ள 40 வகையான 4 ஆயிரம் ரோஜா செடிகளில் பல வண்ண மலர்கள் பூத்துக் காணப்படுகிறது.
இந்த ரோஜா கண்காட்சி துவக்க விழா இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது. மாவட்ட கலெக்டர் அம்ரித் தலைமை வகிக்கிறார். தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன் கலந்துகொண்டு ரோஜா கண்காட்சியை துவக்கி வைக்கிறார்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாஹூ, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர் சமயமூர்த்தி, தோட்டக்கலை மலை பயிர்கள் துறை இயக்குநர் பிருந்தா தேவி உட்பட பலர் இவ்விழாவில் கலந்துக் கொள்கின்றனர்.
ஊட்டியில் கடும் குளிர்
ஊட்டியில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் தாவரவியல் பூங்கா, படகு இல்லம், சூட்டிங் மட்டம் மற்றும் பைக்காரா போன்ற பகுதிகளில் பகல் நேரங்களிலேயே குளிர் உணரப்பட்டது. மழை காரணமாக தாவரவியல் பூங்கா புல் மைதானங்கள் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. மலர்கள் பிளாஸ்டிக் போர்வை கொண்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன. குளிர் அதிகமாக உள்ளதால் பகல் நேரங்களிலேயே உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர். நேற்று ஊட்டியில் அதிகபட்சமாக 18 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சம் 10 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவானது.