×

கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீஸ் என்று மிரட்டி சிறுமி பலாத்காரம்; பிஸ்கட் கம்பெனி டிரைவர் கைது: காதலனும் சிக்கினான்

திருமங்கலம்: வலைத்தளம் மூலமாக காதலித்தவருடன் சென்ற 14 வயது மாணவியை பல ஊர்களுக்கு அழைத்துச் சென்ற சேலம் ஊழியர், மற்றும் போலீசெனக்கூறி பலாத்காரம் செய்த சென்னை டிரைவர் போக்சோவில் கைதாயினர்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் 14 வயது மாணவி. 9ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு சமூக வலைத்தளம் மூலமாக சேலம் ஆத்தூரை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜீவானந்தம்(19) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் காதலிக்கத் தொடங்கினர். அப்போது மாணவியை நேரில் பார்க்க ஆசைப்படுவதாக ஜீவானந்தம் கூறியுள்ளார்.

கடந்த 5ம் தேதி மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வந்த மாணவியை, ஜீவானந்தம் பழநி, கோவை என பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு மாணவியை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது. கடந்த 10ம் தேதி சென்னைக்கு இருவரும் சென்றனர். அங்கு செகண்ட் ஷோ சினிமா பார்த்துவிட்டு இருவரும் சேலம் செல்ல கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர்.

அப்போது இருவரும் நள்ளிரவில் தனியாக நிற்பதை கண்ட காக்கி பேண்ட், வெள்ளை சட்டை அணிந்தவர், தன்னை போலீஸ் எனக்கூறிக்  இருவரையும் டூவீலரில் அழைத்துச் சென்றார். பஸ் நிலையம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில், ஜீவானந்தத்தை இறக்கி விட்டு மாணவியை, தனியாக அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மீண்டும் இருவரையும்  கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டு, ‘‘இதுகுறித்து வெளியே கூறக்கூடாது’’ என இருவரையும் மிரட்டி சென்றுள்ளார். இதையடுத்து மாணவியும், ஜீவானந்தமும் சேலம் ஆத்தூரில் உள்ள ஜீவானந்தம் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு மாணவி நடந்த சம்பவங்களை ஜீவானந்தத்தின் அம்மாவிடம் தெரிவித்தார். அவர், மாணவியையும், மகனையும் ஆத்தூர் மகளிர் ஸ்டேசனுக்கு அழைத்துச் சென்று நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். மகளிர் போலீசார், திருமங்கலம் டவுன் போலீசாரை தொடர்பு கொண்டு பேசினர். இதையடுத்து திருமங்கலம் டவுன் போலீசார், ஆத்தூர் சென்று மாணவி, ஜீவானந்தத்தை அழைத்து வந்தனர். இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட் சென்று, போலீஸ் எனக் கூறி பாலியல் பலாத்காரம் செய்த நபரை சிசிடிவி காட்சிகள் மூலம் தேடினர்.  

விசாரணையில் அந்த நபர் சென்னை, வளசரவாக்கத்தை சேர்ந்த ஆண்டனி அலெக்ஸ்(30) என தெரிந்தது. இவர் பிரபல பிஸ்கட் கம்பெனியில் லாரி டிரைவராக உள்ளார். மாணவி கொடுத்த புகாரின்பேரில் ஜீவானந்தம், டிரைவர் ஆண்டனி அலெக்ஸ் இருவரையும், போக்சோ சட்டத்தில் மதுரை திருமங்கலம் டவுன் போலீசார் கைது செய்தனர்.


Tags : Coimbatore , Intimidated girl raped by police at Coimbatore bus stand; Biscuit Company Driver Arrested: Boyfriend Caught
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...