சென்னை:தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை, இலக்கிய மேம்பாட்டுச் சங்கத்தின் மூலம் 2020-2021ம் ஆண்டிற்கான சிறந்த படைப்புகளுக்காகத் தேர்வு செய்யப்பட்ட 21 சிறந்த எழுத்தாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல் தவணை தொகையாக தலா இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்தியாவின் 75ம் ஆண்டு சுதந்திர அமுத பெரு விழாவை முன்னிட்டு, ஒடிசா மாநிலம். புவனேஸ்வரில் 23.4.2022 முதல் 29.4.2022 வரை நடைபெற்ற 9-வது தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை விழாவில், உதகை மாவட்டத்தில் வாழும் பண்டைய பழங்குடியினரான தோடர் இன மக்களால் வெள்ளை நிற பருத்தி துணியில் கருப்பு மற்றும் சிவப்பு நிற கம்பளி நூல்களை கொண்டு கைகளால் நெய்யப்படும் பூத்தையல் தேசிய அளவில் முதலிடம் பெற்றது.
இதற்கான பரிசு தொகையாக ரூ.5000மும் பழங்குடியினர் ஆய்வு யைமத்திற்கு கேடயமும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டது. தேசிய அளவிலான பழங்குடியினர் கைவினைப் பொருட்கள் விற்பனை விழாவில், தோடர் பழங்குடியினரின் பூத்தையல் தேசிய அளவில் முதல் பரிசு பெற்றதற்காக, பழங்குடியின பெண்களும், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) உதயகுமாரும், முதல்வரை சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை முதன்மைச் செயலாளர் மணிவாசன், ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் மதுமதி, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் அண்ணாதுரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.