சென்னை: நகர்ப்புற மருத்துவ மையங்களில் அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், நகர்ப்புற மருத்துவ மையங்களில் அம்மா மினி கிளினிக்கில் பணிபுரிந்த மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என அறிவித்தார். இதன்பின் பேசிய, நகர்ப்புற மருத்துவ மையங்கள் அமைக்க 140 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மாநகராட்சி வார்டுகளில் மக்கள் தொகைக்கு ஏற்ப, நடமாடும் மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், சென்னை மாநகராட்சிக்கு மட்டும் மருத்துவ கட்டமைப்புக்கு ரூ.588 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மற்றும் சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர் சந்தித்தனர். இதனிடையே, சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை அமைக்கப்படும் என நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக பேசிய அவர், நகர்ப்புறங்களில் வாழும் மக்களின் மறுவாழ்வுக்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் திட்டம் குறித்து அறிவித்ததன்படி, சென்னையில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு மருத்துவமனை என புதிதாக மொத்தம் 200 மருத்துவமனைகள் அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் பெரிய மருத்துவமனைகளில் மக்கள் அதிகளவில் வருவதை தவிர்க்க முடியும் எனவும் தெரிவித்திருந்தார்.