சென்னை: ஒன்றிய அரசை விமர்சிக்கும் வகையில் பாடல் வெளியிட்டுள்ள நடிகர் கமல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆர்டிஐ செல்வம் என்பவர் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: நடிகர் கமல் நடித்து விரைவில் வெளியாக உள்ள ‘விக்ரம்’ திரைப்படத்தில் வரும் ‘பத்தலே பத்தலே’ என்ற பாடல் ஒன்றிய அரசை திருடன் என்று கூறும் வகையில் அமைந்துள்ளது. அந்த பாடலில் ‘ கஜானாலே காசில்லே... கல்லாலையும் காசில்லே.. காய்ச்சல் ஜூரம் நிறையா வருது தில்லாலங்கடி தில்லாலே... ஒன்றியத்தின் தப்பாலே ஒன்னியும் இல்ல இப்பலே... சாவி இப்ப திருடன் கையில் தில்லாலங்கடி தில்லாலே’ என்றும், சாதிய ரீதியான பிரச்னைகளை தூண்டும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளது. எனவே விக்ரம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பாடல் வரிகளை நீக்க வேண்டும். மேலும், ஒன்றிய அரசை விமர்ச்சித்து பாடல் வெளியிட்ட விக்ரம் படத்தின் நடிகர் கமலஹாசன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.