×

பிரதமரின் வீடு திட்டம்: லஞ்சம் கொடுத்தும் நிதி வழங்காததால் வாலிபர் தற்கொலை: ஊராட்சி ஒன்றிய அலுவலர் சஸ்பெண்ட்

நன்னிலம்: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கமுதக்குடியை சேர்ந்த லெனின் மகன் மணிகண்டன்(25). கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன், ஒன்றிய அரசின், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலகம்  மூலம் அனுமதி பெற்றுள்ளார். முதல்கட்ட பணி முடிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மணிகண்டன் முதல் தவணை பணம் கேட்டுள்ளார். அப்போது ஊராட்சி ஒன்றிய  அலுவலரான கிராம  மேற்பார்வையாளர் மகேஸ்வரன் (45) கேட்டபடி ரூ.3 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். இதைதொடர்ந்து 2வது தவணை பணம் கேட்டதற்கு மகேஸ்வரன் ரூ.15ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.  

இதற்காக வெளிநாடு செல்வதற்காக சேமித்து வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை கொடுத்தார். 10 நாட்கள் கடந்தும் 2வது தவணை பணம் வராததால் மகேஸ்வரனை தொடர்பு கொண்டபோது அவர் சரியான பதில் சொல்லவில்லை என  கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த மணிகண்டன், நேற்றுமுன்தினம் பூச்சி மருந்து குடிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.  இதனை பார்த்த சிலர், வீட்டில் மயங்கி கிடந்த மணிகண்டனை மீட்டு  காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மணிகண்டன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கிராம மேற்பார்வையாளர் மகேஸ்வரனை சஸ்பெண்ட் செய்து  கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

Tags : PM ,Panchayat , PM's housing scheme: Youth commits suicide for not paying bribe: Panchayat union official suspended
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!