×

பிரதமரின் திட்டத்தில் வீடு கட்ட லஞ்சம் கொடுத்தும் நிதி கிடைக்கவில்லை வாலிபர் விஷம் குடித்து தற்கொலை: அதிகாரி அதிரடி சஸ்பெண்ட்

நன்னிலம்: திருவாரூர் அருகே வீடு கட்டும் திட்டத்தில் நிதி பெற லஞ்சம் கொடுத்த வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக கிராம மேற்பார்வையாளரை சஸ்பெண்ட் செய்து திருவாரூர் கலெக்டர் உத்தரவிட்டார். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கமுதக்குடியை சேர்ந்த லெனின் மகன் மணிகண்டன்(25). கூரை வீட்டில் வசித்து வந்த மணிகண்டன், ஒன்றிய அரசின் பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் வீடு கட்டுவதற்காக வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் அனுமதி பெற்றுள்ளார். முதல்கட்ட பணி முடிந்ததும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மணிகண்டன் முதல் தவணை பணம் கேட்டுள்ளார். அப்போது கிராம மேற்பார்வையாளர் மகேஸ்வரன்(45), ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டார். இதனால் கடன் பெற்று அந்த பணத்தை மணிகண்டன் கொடுத்தார்.

இதைதொடர்ந்து 2வது தவணை பணம் கேட்டதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சம் வேண்டுமென மகேஸ்வரன் கேட்டார். இதனால் தான் வெளிநாடு செல்வதற்காக சேமித்து வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை கொடுத்தார். 10 நாட்கள் கடந்தும் 2வது தவணை பணம் வராததால் மேற்பார்வையாளர் மகேஸ்வரனை தொடர்பு கொண்டபோது அவர் சரியான பதில் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான மணிகண்டன், தற்கொலை செய்ய முடிவு செய்து பூச்சி மருந்தை நேற்று முன்தினம் குடித்தார். மேலும் விஷம் குடிப்பதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோவை பார்த்த சிலர் விரைந்து சென்று வீட்டில் மயங்கி கிடந்த மணிகண்டனை சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மணிகண்டன் இறந்தார். இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கிராம மேற்பார்வையாளர் மகேஸ்வரனை சஸ்பெண்ட் செய்து கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் உத்தரவிட்டார். வீடு கட்டும் திட்டத்தில் நிதி பெற லஞ்சம் கொடுத்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : PM , In the Prime Minister's plan, house, bribe, officer, suspended
× RELATED ஐதராபாத்தில் பேருந்து சேவை குறைப்பு!!