×

காயத்தால் விலகினார் ஜடேஜா!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, காயம் காரணமாக நடப்பு தொடரின் எஞ்சியுள்ள ஆட்டங்களில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு சீசனின் தொடக்கத்தில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் ஜடேஜா. ஆனாலும், களத்தில் தோனிதான் வழக்கம் போல்  பீல்டிங் செட் செய்வது, அடுத்து யார் பந்துவீசுவது என்பதை முடிவு செய்வது என நிழல் கேப்டனாக செயல்பட்டது வெளிப்படையாகவே தெரிந்தது.  ஜடேஜா பேருக்குதான் கேப்டனாக இருந்தார்.  சென்னை அணி தொடர் தோல்விகளால் தள்ளாடிய நிலையில், ஜடேஜாவும் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார்.

இதைத் தொடர்ந்து, தனது ஆட்டத்தில் கவனம் செலுத்துவதற்காக கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது பேசிய தோனி, ‘கேப்டன் பதவிக்கான நெருக்கடியை ஜடேஜாவால் சமாளிக்க முடியவில்லை’ என்றார். அது ஜடேஜாவின் மனதை காயப்படுத்தியதாக கூறப்படுகிறது.  அதுமட்டுமல்ல, தான் கேப்டனாக இருந்த வரை சுமாராக விளையாடிய வீரர்கள், தோனி மீண்டும் கேப்டன் ஆனதும் அதிரடியாக விளையாடியதும் ஜடேஜாவை யோசிக்க வைத்துள்ளது. நடப்பு சீசனில் அவர் இதுவரை 10 லீக் ஆட்டங்களில் விளையாடி 116 ரன் மற்றும் 5 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.

பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தின்போது ஜடேஜாவுக்கு  விலா பகுதியில் காயம் ஏற்பட்டது. ஆனாலும், அதனை பெரிதுபடுத்தாமல் தொடர்ந்து விளையாடினார். அதனால் பாதிப்பு அதிகமாகவே, டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட முடியாமல் போனது. இந்நிலையில், காயம் காரணமாக நடப்பு சீசனில் எஞ்சியுள்ள ஆட்டங்களில் ஜடேஜா விளையாட மாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Tags : Jadeja , Jadeja withdraws from injury
× RELATED நைட் ரைடர்சை வீழ்த்தியது சிஎஸ்கே: ஜடேஜா அபார பந்துவீச்சு