செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் புதிதாக உருவாக்கப்பட்ட பிறகு, மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் முதன் முறையாக எம்ம்பிக்கள் டி,ஆர்.பாலு, செல்வம், அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது. இதில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, வணிகம் ஆகிய துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், நிலுவையில் உள்ள விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் குறித்து விவாவதிக்கப்பட்டது.
அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுக்க, துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கிஷன் கார்டு உள்பட கடனுதவி திட்டங்கள் நிலை, தற்போதைய நிலை குறித்து கேட்டறியப்பட்டது. விண்ணப்பித்த விவசாயிகளுக்கு குறித்த காலத்தில் கடனுதவிகள் கிடைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் அறிவுறுத்தப்பட்டது. மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ஊரக பகுதிகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்களை, புதிதாக பொறுப்பேற்றுள்ள உள்ளாட்சி மக்கள் பிரநிதிகள் மூலம் கண்டறிந்து, அதில், விடுப்பட்டவர்களுக்கு, உடனடியாக தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சத்துணவு மையங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப, துறை வாரியான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். சத்துணவு மைய கட்டிடங்கள் இல்லாத இடங்களில் அப்பகுதி எம்எல்ஏ, எம்பிகளின் பொதுநிதியின் மூலம் கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓய்வூதியத்துக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள தகுதியான விண்ணப்பங்களின் நிலை குறித்து ஆய்வு செய்து, அதில் தகுதியான விண்ணப்பங்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், எம்எல்ஏக்கள் வரலட்சுமி மதுசூதனன், இ.கருணாநிதி, அரவிந்த ரமேஷ், கலெக்டர் ராகுல்நாத், எஸ்பி சுகுனா சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சா.செல்வகுமார், தாம்பரம் மேயர் வசந்தாகுமாரி கமலகண்ணன், மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர், செம்பருத்தி துர்கேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) .மா.நாராயணன் உள்பட பலர் பங்கேற்றனர்.