×

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் பெரிய தேரோட்டம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சித்திரை திருவிழாவின் 7ம் நாள் பெரியத்தேர் தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பட்சி தீர்த்தம், வேதமலை என்பது பல்வேறு பெயர்களில் அழைக்கப்படும் திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில் சிவத்தலங்களில் முக்கிய தலமாக விளங்குகிறது. இதையொட்டி, வெளிநாடுகள், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வேதகிரீஸ்வரரை வணங்கி செல்கின்றனர். இங்கு, ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 11 நாள் திருவிழா மிகவும் விமர்சையாக நடப்பது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக, கொரோன ஊரடங்கால் சித்திரை திருவிழா நடக்கவில்லை.

இந்நிலையில், இந்தாண்டு 11 நாள் சித்திரை திருவிழா நடத்த முடிவு செய்து, முதல் நாளான 5ம் தேதி காலை வேதகிரீஸ்வரர் மலைக்கோயில் மீது  கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து 7ம் நாளான நேற்று பெரிய தேர் உற்சவம் கோலாகலமாக நடந்தது. அப்போது, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெரியதேரில் வேதகிரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, காலை 6 மணிக்கு ‘ஓம் நமச்சிவாய’ என்ற கோஷம் முழங்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக, விநாயகர் தேர், பின்னர் வேதகிரீஸ்வரர் பெரிய தேர், தொடர்ந்து திரிபுரசுந்தரியம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய தேர்கள் அசைந்தாடி 4 மாட வீதிகளில் வலம் வந்தன.

திருக்கழுக்குன்றம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து, வேதகிரீஸ்வரரை தரிசனம் செய்தனர். வழிநெடுகிலும் பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. பக்தர்ளுக்கு குடிநீர், கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகளை திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் ஜி.டி.யுவராஜ், துணை தலைவர் வீ.அருள்மணி, செயல் அலுவலர் ஜெயக்குமார் மற்றும் கவுன்சிலர்கள் செய்தனர்.

Tags : Thirukkalukkunram Vedagriswarar Temple ,Great ,Therottam , Thirukkalukkunram Vedagriswarar Temple Great Therottam
× RELATED ஆர்எஸ்எஸ், சங் பரிவாரால்...