×

மயிலாப்பூர் தம்பதி கொலையில் துரிதமாக குற்றவாளிகள் கைது சென்னை மாநகர காவல்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், சென்னை மாநகர காவல்துறை துரிதமாக செயல்பட்டு 6 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளிகளை கைது செய்ததற்காக, அவர்களது பணியை பாராட்டி வாழ்த்தினார். சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த், அவரது மனைவி அனுராதா ஆகியோர் கடந்த 7ம் தேதி கொல்லப்பட்டனர்.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அந்த வீட்டில் ஓட்டுநராக பணியாற்றி வந்த நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் டார்ஜிலிங்கை சேர்ந்த அவரது கூட்டாளி ரவிராய் ஆகியோர் சென்னை மாநகர காவல் துறையினரால் ஆந்திர காவல்துறையினர் உதவியுடன் ஓங்கோலில் கைது செய்யப்பட்டனர். இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டு அவர்கள் கொலை செய்து புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். மேலும் குற்றவாளிகளிடமிருந்து 1127 சவரன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.

இக்கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு, குற்றவாளிகளை கைது செய்த மயிலாப்பூர் மாவட்ட காவல் துணை ஆணையர் திஷா மிட்டல், காவல் உதவி ஆணையர்கள் குமரகுருபரன் மற்றும் கவுதமன், காவல் ஆய்வாளர் ரவி, உதவி ஆய்வாளர்கள் கிருஷ்ணன், மாரியப்பன், அன்பழகன், காவலர் நிலை-1 சங்கர் தினேஷ், காவலர் கதிரவன் ஆகியோரை முதலமைச்சர் பாராட்டி, வாழ்த்தினார். இந்நிகழ்வின்போது, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை செயலாளர் எஸ்.கே. பிரபாகர், டிஜிபி சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், காவல் இணை ஆணையர் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai Metropolitan Police ,Mylapore , Mylapore couple's murder suspects arrested
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து...