×

வேலூரில் இன்று அதிகாலை குடிபோதையில் தகராறு கணவன் சரமாரி வெட்டிக்கொலை: மனைவி மருத்துவமனையில் அனுமதி

வேலூர்: குடிபோதையில் ரகளை செய்து தன்னை கத்தியால் வெட்டிய கணவனை, அவரது மனைவி வெட்டிக் கொலை செய்துள்ளார். வேலூரில் இன்று அதிகாலை இச்சம்பவம் நடந்துள்ளது.
வேலூர் வேலப்பாடி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் குமரவேல் (60). லாரி ஷெட்டில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி கோமதி (48). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். வேலைக்கு செல்லும் குமரவேல் தினந்தோறும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வருவாராம். அப்போது மனைவி மற்றும் மகள்களிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்றிரவும் வழக்கம்போல் குமரவேல் மது குடித்துவிட்டு வந்துள்ளார். தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று அதிகாலை 1 மணியளவில் தூங்கி கொண்டிருந்த கோமதியை குமரவேல் திடீரென தாக்கியுள்ளார். இதனால் கோமதி அலறினார். உடனே மகள்கள் எழுந்து வந்து தடுக்க முயன்றுள்ளனர். அவர்களையும் குமரவேல் சரமாரி தாக்கியுள்ளார். மேலும் வீட்டில் இருந்த கத்தியால் கோமதியை குமரவேல் வெட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோமதி, அந்த கத்தியை பறித்து கணவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த குமரவேல் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றபோது சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த கோமதி, வேலூர் அரசு மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்து தன்னை வெட்ட முயன்ற கணவரை அவரது மனைவியே வெட்டிக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Vellore ,Saramari , wife, husband, murder attack
× RELATED பெண் தூய்மைப் பணியாளர் மீது பைக்கால் மோதிய இளைஞர்!