×

தஞ்சையில் பயங்கரம் ஆடிட்டர் சரமாரி வெட்டிக்கொலை: அதிமுக பிரமுகர் மகன் உள்பட 4 பேருக்கு வலை

தஞ்சை: தஞ்சை கரந்தை சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன் (55). ஆடிட்டர். மேலும் வீட்டருகே கோழி, மீன் பண்ணை வைத்துள்ளார். இவரது பண்ணைக்கு எதிரே உள்ள மாநகராட்சியின் குளியலறை, கழிவறை கட்டிடத்தை அதே பகுதியை சேர்ந்த அதிமுக 5வது வார்டு பிரதிநிதி ருக்மணி என்பவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காண்ட்ராக்ட் எடுத்து பராமரித்து வந்தார். இதற்கிடையே குளியலறை, கழிவறை கட்டிடத்தை கடந்த 2 மாதத்திற்கு முன்பு மகேஸ்வரன் காண்ட்ராக்ட் எடுத்தார். இதனால் மகேஸ்வரனுக்கும், ருக்மணி தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் பண்ணையில் மகேஸ்வரன் சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அப்போது அங்கு பைக்கில் வந்த ருக்மணியின் மகன் கார்த்திக் உள்பட 4 பேர் திடீரென மகேஸ்வரனை சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். இதில் பலத்த காயமடைந்த மகேஸ்வரன், சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த மேற்கு காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மகேஸ்வரன் மனைவி நிஷா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர்.

Tags : Thanjavur ,AIADMK , Tanjore, Auditor Volley, Assassination
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...