×

பணிமனைகளில் சோலார் ஒளி பலகைகள் அமைத்து மின்சாரம் தயாரிக்க நடவடிக்கை: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

சென்னை: அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம்  இன்று (11.05.2022),  போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் கே.கோபால், இ.ஆ.ப.,மற்றும் அனைத்துப் போக்குவரத்துக் கழகங்களின் மேலாண் இயக்குநர்கள் மற்றும் போக்குவரத்துத் துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள், அரசு போக்குவரத்துக் கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் செலவீனங்களைக் குறைத்து நிதி நிலையினை மேம்படுத்துதல் குறித்தும், நாளை (12.05.2022) நடைபெற உள்ள போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கான 14 ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டார்கள்.

பேருந்துகள் இயக்கம் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்போது முதலமைச்சரின் மகளிருக்கான இலவச பயணத்தை மேம்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு அலுவலர்கள் பதிலளிக்கையில் தமிழ்நாடு முழுவதும் சாதாரணக் கட்டண பேருந்து அறிவிப்புக்கு முன்னர் (அதாவது 07.05.2021-க்கு) சாதாரண கட்டண பேருந்துகளின் எண்ணிக்கை 5,865 ஆகவும், தற்போது 7,321 ஆகவும் அதிகரித்து மகளிர் பயணம் செய்யும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். தற்போது, அதிக மகளிர் எளிதில் பயணம் செய்யும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தனர். தற்போது அதிக மகளிர் கட்டணமில்லாத பயணம் செய்வதாகவும், சாதாரண கட்டண பயணிகளில் மகளிரின் பங்கு 40 சதவிகிதத்தில் இருந்து 62 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும், 10.05.2022 வரை 110.37 கோடி மகளிர் பயணம் செய்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், தற்போது 2022-23 ஆண்டிற்கான சட்டசபையில் அறிவித்துள்ள அறிவிப்புகளில் தானியங்கி பயணச்சீட்டு வழங்கும் முறை/ பணப் பரிவர்த்தனையற்ற பயணச்சீட்டு முறையினை அறிமுகப்படுத்துதல், பயணக்கட்டணச் சலுகை அனுமதி சீட்டுகளை வலைதளம் வாயிலாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்தல். அனைத்து போக்குவரத்துக் கழகங்களுக்கும் பொதுவாக ஒருங்கிணைந்த பயணிகள் குறைதீர்க்கும் உதவி மையம் அமைத்தல், மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாநகரங்களில் உள்ள 16 பேருந்து முனையங்களில் (LED) தகவல் பலகை மூலம் இணையவழி பயணியர் தகவல் ஏற்பாடு செய்தல், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயண சுமைப் பெட்டிகள் வாடகைக்கு விடுதல், இணையவழியாக முன்பதிவு செய்யும் இருவழி பயணச்சீட்டுகளுக்கு 10% கட்டண சலுகை அறிமுகப்படுத்துதல், 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் செய்ய அனுமதித்தல்,

திருச்சி, விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்தில் அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளுடன் கூடிய ஓட்டுநர் பயிற்சி மையம் அமைத்தல் ஆகியவற்றை விரைவில் போக்குவரத்துக் கழகங்களில் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தினார். மேலும், பயண கட்டணம் தவிர்த்த இதர வருவாயினை பெருக்குவதற்கான முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ளவும், பணிமனைகளில் சோலார் ஒளி பலகைகள் அமைத்து மின்சாரம் தயாரித்தல், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லரை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

Tags : Minister ,S. S.S. Sivasankar , Measures to set up solar light panels in workshops to generate electricity: Minister SS Sivasankar
× RELATED பணம் இல்லாததால் நிதியமைச்சர் நிர்மலா...