×

தஞ்சையில் கழிவறை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பிரபல ஆடிட்டர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது

தஞ்சை: தஞ்சாவூரில் கழிவறை ஏலம் எடுப்பதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பிரபல ஆடிட்டர் மகேஸ்வரனை வெட்டி படுகொலை செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர். தஞ்சை சேர்வைக்காரன் தெருவில் வசித்து வருபவர் மகேஸ்வரன். பிரபல ஆடிட்டர் ஆன இவர், அதேபகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான கழிவறையை அதிகப்பணம் கட்டி ஏலம் எடுத்துள்ளார். இதனால் கார்த்தி என்பவருக்கும், ஆடிட்டர் மகேஸ்வரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆடிட்டர் மகேஸ்வரன் நேற்று இரவு, தனது தோட்டத்து வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது, கார்த்தி, அர்ஜுனன், மணிகண்டன் உள்ளிட்ட 4 பேர் அங்கு வந்து, அவருடன் அமர்ந்து சகஜமாக பேசியுள்ளனர்.

தண்ணீர் குடிப்பதற்காக மகேஸ்வரன் எழுந்து சென்றபோது, பின்புறம் இருந்து அவரை 4 பேரும் சேர்ந்து, அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ஆடிட்டர் மகேஸ்வரன் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். ஆடிட்டர் இறந்ததை உறுதி செய்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. தகவல் அறிந்து வந்த தஞ்சை மேற்கு காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா, டிஎஸ்பி கபிலன் ஆகியோர் ஆடிட்டர் மகேஸ்வரன் சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பியோடிய கொலையாளிகள் 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்து, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.     


Tags : Thanjavur , Tanjore, toilet, animosity, auditor, murder, arrest
× RELATED தஞ்சாவூர் நாடாளுமன்ற தேர்தலில் 100%...