×

சேதுபாவாசத்திரம் அருகே துணிகரம் அதிகாலை வீட்டின் கதவை உடைத்து கொள்ளை முயற்சி-வீட்டுக்காரர் சத்தத்தை கண்டு மர்ம நபர்கள் தப்பியோட்டம்

பேராவூரணி : சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினத்தில் நேற்று அதிகாலை வீட்டின் கதவை உடைத்து, மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயற்சித்தனர், அப்போது வீட்டுக்காரர் விழித்து சப்தமிட்டதால் கொள்ளையர்கள் தாங்கள் வந்த பைக், கொண்டு வந்த ஆயுதங்களை விட்டுவிட்டு தப்பியோடினர்.சேதுபாவாசத்திரம் அருகே மல்லிப்பட்டினம் கடைத்தெருவில் வசித்து வருபவர் ஜெகபர் அலி, இவர் விசைப்படகு வைத்து தொழில் செய்து வருகிறார். மேலும், விசைப்படகுகளை பழுது நீக்கும் தொழிலும் செய்து வருகிறார்.

இவர் தனது வீட்டில் நேற்று தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில், 2 மர்ம நபர்கள் கதவை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்து திருட முயற்ச்சித்துள்ளனர். இந்த சத்தம் கேட்டு எழுந்த ஜெகபர் அலி திருடர்கள் நிற்பதைக் கண்டு கூச்சலிட்டார். இதையடுத்து அந்த மர்ம நபர்கள் இருவரும், தாங்கள் கொண்டு வந்த பைக் மற்றும் கத்தி, அரிவாள், கடப்பாறை, ஸ்குரு டிரைவர் மற்றும் விலை உயர்ந்த கேமரா ஆகியவற்றை அங்கேயே விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

அதே இரவில் மல்லிப்பட்டினம் வடக்குத் தெருவை சேர்ந்த ஓட்டல் நடத்தி வரும் அய்யூப்கான் என்பவர் வீட்டில் இருந்த பைக் திருடப்பட்டிருந்தது. எனவே, மர்ம நபர்கள் தங்கள் வந்த பைக்கை விட்டு விட்டு, அய்யூப்கானின் பைக்கை திருடிக்கொண்டு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் அதிகாலையில் திரளான மக்கள் கூடினர். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சேதுபாவாசத்திரம் சப்.இன்ஸ்பெக்டர் ஜெம்புலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி திருடர்கள் விட்டுச்சென்ற பைக், ஆயுதங்கள், கேமரா ஆகியவற்றை கைப்பற்றி போலீஸ் நிலையம் கொண்டு சென்றார். அய்யூப்கான் அளித்த புகாரின் பேரில் பைக் திருட்டு குறித்தும், கொள்ளை முயற்சி குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Sethupavasathiram , Peravurani: Mysterious persons broke the door of a house in Mallipattinam near Sethupavasathiram yesterday morning and tried to rob it.
× RELATED சேதுபாவாசத்திரம் ஒன்றியம்...