×

குண்டர் சட்டம் ரத்தானதால் ஜாமீன் கோரி பப்ஜி மதன் மனு!: காவல்துறை பதிலளிக்க அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

சென்னை: பப்ஜி மதன் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க காவல்துறைக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆபாசமாக பேசிக்கொண்டு பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடி சிறுவர்கள் முதல் இளைஞர்களை தவறான வழியில் கொண்டு சென்றதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பப்ஜி மதனுக்கு எதிராக மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் பிரிவினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் பப்ஜி மதன் தலைமறைவானார். பெண்களை ஆபாசமாக சித்தரித்தல், ஆபாசமாக பேசுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பதிவான வழக்குகளில் கடந்த ஆண்டு ஜூன் 18ம் தேதி தர்மபுரியில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன், புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் மீது ஏராளமான புகார்கள் வந்ததால் அவரை சைபர் குற்றவாளி என கூறி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் ஜாமின் வழங்கக்கோரி பப்ஜி மதன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து தனக்கு ஜாமின் வழங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பப்ஜி மதன் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் நக்கீரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மதன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பப்ஜி மதன் மீது பதிவு செய்யப்பட்ட பிரிவுகளின்படி அவருக்கு 3 மாதம் தான் தண்டனை வழங்க முடியும் எனவும் ஆனால் அவர் 9 மாதங்களாக சிறையில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் மதன் மீது போடப்பட்டுள்ள பிரிவுகள் பெரும்பாலும் பொருத்தமற்றவை எனவும் எனவே அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் எனவும் கோரினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், மதனின் மனு குறித்து பதிலளிக்க காவல்துறை தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்கப்பட்டதை ஏற்றுக்கொண்டு ஒருவார கால அவகாசம் வழங்கி இது தொடர்பான வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.


Tags : Babji Madan ,Chennai High Court , Bail, Babji Madan, Police, Chennai High Court
× RELATED தபால் வாக்குப் பதிவு நடைமுறை தொடங்கி...