டெல்லி: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததன் 8-ம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நாடு முழுவதும் 15 நாள் பிரச்சாரத்தை மேற்கொள்ள அக்கட்சி முடிவு செய்துள்ளது. மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 8-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியின் நற்பணிகளை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என கட்சியினருக்கு தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்துள்ளார்.
பிரதமரின் பல்வேறு சாதனைகள் மக்களிடையே சென்றடையவும், ஏழைகள் மற்றும் தாழ்த்தப்பட்ட பிரிவினரின் வாழ்க்கையை மேம்படுத்த, ஒன்றிய அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார். சமூக ஊடகங்கள் மற்றும் திரையரங்குகளில் ஒன்றிய அரசின் பல்வேறு நலத்திட்டங்களை விளம்பரப்படுத்தவும் பாஜக தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளின் சேவை நல்லாட்சி மற்றும் ஏழை நலன் என்ற தலைப்பில் வரும் 30-ம் தேதி முதல் ஜூன் 15-ம் தேதி வரை பிரச்சாரத்தை தொடங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.