×

திருமணமான ஒரு மாதத்தில் சோகம்: கணவர் வீட்டில் கழிவறை இல்லாததால் மனைவி தற்கொலை

கடலூர்: கணவர் வீட்டில் கழிவறை வசதி இல்லாததால், பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடலூர் புதுநகர் நத்தவெளி ரோடு பகுதியை சேர்ந்தவர், கார்த்திகேயன் மனைவி ரம்யா (27). இவர் கடலூரில் உள்ள ஒரு மெடிக்கலில் வேலை பார்த்து வந்தார். இவரும் கார்த்திகேயனும் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன், கடந்த மாதம் 6ம் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகுதான் கார்த்திகேயன் வீட்டில், கழிப்பறை வசதி இல்லாதது ரம்யாவுக்கு தெரியவந்தது.

இதனால் ரம்யா கடலூர் அருகே அரிசிபெரியாங்குப்பத்தில் உள்ள, தனது பெற்றோர் வீட்டில் தங்கியுள்ளார். வேறு வீடு பார்த்து விட்டு வந்து அழைத்து செல்வதாக கார்த்திகேயன், ரம்யாவிடம் கூறியுள்ளார். ஒரு மாதமாகியும் கார்த்திகேயன் வேறு வீடு பார்க்க வில்லை என்று தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மனவேதனை அடைந்த ரம்யா, வீட்டில் உள்ள மின்விசிறியில், தூக்கு போட்டு கொண்டார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர், அவரை மீட்டு, சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இரவு ரம்யா பரிதாபமாக உயிர் இழந்தார்.


Tags : Tragedy in a month of marriage: Wife commits suicide due to lack of toilet in husband's house
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...