×

தேர்வு அறையில் ஆசிரியை கண்டிப்பு 9ம் வகுப்பு மாணவி தற்கொலை: காவல் நிலையம் முற்றுகை

நெல்லை: திசையன்விளையில் 9ம் வகுப்பு மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். தேர்வு அறையில் சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் ஆசிரியை கண்டித்ததால் இந்த விபரீத முடிவை அவர் எடுத்ததாக தெரிகிறது. சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவியின் உறவினர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளை லட்சுமி நகரை சேர்ந்தவர் பெருமாள். நகைத் தொழிலாளி. இவரது மகன் சங்கர்(15) மற்றும் மகள் ரம்யா(14) ஆகியோர் அங்குள்ள தனியார் பள்ளியில் முறையே 10 மற்றும் 9ம் வகுப்பு படித்து வந்தனர். இந்நிலையில் நேற்று மாணவி ரம்யா, பள்ளியில் ஆண்டு இறுதி தேர்வு எழுதினார். அப்போது அவரை சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் தேர்வு கண்காணிப்பு ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகியோர் கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த மாணவி, வீட்டுக்கு சென்ற பின்னர் இனிமேல் பள்ளிக் கூடத்திற்கு செல்லமாட்டேன் என்று பெற்றோரிடம் கூறியுள்ளார். அவரை பெற்றோர் சமாதானப்படுத்தினர். இந்நிலையில் நேற்றிரவு மாணவியின் தாய், அருகில் உள்ள வீட்டில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டில் தனியாக இருந்த மாணவி ரம்யா, மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்தார். மகள் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்து திசையன்விளை போலீசார், மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மாணவி தற்கொலைக்கு காரணமான ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் உறவினர்கள் திசையன்விளை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்
விருதுநகர் வீரபத்திரன் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (54). இவரது மகள் பாண்டிமீனா (16). இங்குள்ள தனியார் பெண்கள் மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில், தமிழகம் முழுவதும் பிளஸ் 1 தேர்வு இன்று துவங்கியது. தேர்வில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் மாணவி பாண்டிமீனா நேற்றிரவு வீட்டில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : Exam room, teacher, strict, student, suicide
× RELATED தமிழ்நாட்டில் கோடை வெப்பத்தை...