×

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆய்வில் 13ம் நூற்றாண்டை சேர்ந்த சீனாவின் பீங்கான் ஓடுகள் கண்டெடுப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2010ம் ஆண்டு முதல் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் தொல்பொருட்களை அடையாளம் காணவும், கல்வெட்டுகளை படிக்கவும், படியெடுக்கவும் அறிந்துள்ளனர். இந்நிலையில் 10ம் வகுப்பு மாணவர்கள் மனோஜ், ராம்குமார், பிடல் காஸ்ட்ரோ, அஸ்வின் ராஜ், பாலாஜி ஆகியோர் பொக்கனாரேந்தல் தொடக்கப்பள்ளி அருகே உள்ள வயல் பகுதியிலும், சேதுபதி அரண்மனையின் கிழக்கிலுள்ள வயல்களிலும், சீன நாட்டு பீங்கான் ஓடுகளை கண்டெடுத்து தொல்லியல் ஆய்வாளர் ராஜகுருவிடம் கொடுத்துள்ளனர். இதுகுறித்து ராஜகுரு கூறியதாவது: சீன நாட்டு பீங்கான் பாண்டங்களில் இரு வகை உள்ளன. இப்பீங்கான் ஓடுகளை உன்னிப்பாக பார்த்தால், உள், வெளிப்பகுதிகளில் வலைப்பின்னல் போன்ற அமைப்பு காணப்படும். வெள்ளைக் களிமண்ணால் உருவாக்கப்பட்டு அதன் மேல் உருவங்கள், வடிவங்கள் வரைந்து பின் உப்பு பூச்சு மூலம் பளபளக்கச் செய்து, ஒரு வகை பீங்கான் பாண்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு கிண்ணம், குடுவை, தட்டு, ஜாடி போன்றவற்றின் உடைந்த ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

வெள்ளை பீங்கான் மேல் சிவப்பு, கரும்பச்சை, பழுப்பு, நீலம், மஞ்சள் நிறத்தில் கோடுகள், பூக்கள், வளைவுகள், இலை வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. இவை வரலாற்றின் இடைக்காலமான கி.பி.12-13ம் நூற்றாண்டை சேர்ந்தவை. கி.பி 10 முதல் 13ம் நூற்றாண்டு வரை சீனர்களின் முக்கிய வணிகப் பொருளாக பீங்கான் பாண்டங்கள் இருந்துள்ளன. அவர்கள் பாண்டிய நாட்டிலிருந்து முத்து, துணி போன்றவற்றை கொள்முதல் செய்துள்ளனர். சீனாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் நல்ல வணிகத் தொடர்பு இருந்துள்ளது. சீனாவிலிருந்து வரும் பீங்கான் பாண்டங்கள், ராமநாதபுரம் அருகே பெரியபட்டினம் துறைமுகத்தில் இறக்கப்பட்டு, அங்கிருந்து பாண்டிய நாடு முழுவதும் விற்பனைக்கு சென்றுள்ளன. மாணவர்கள் தற்போது கண்டெடுத்த சீனநாட்டு பீங்கான் ஓடுகள் ராமநாதபுரம் அரசு அருங்காட்சிய காப்பாட்சியர் சிவகுமாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. 900 ஆண்டுகள் பழமையான சீனநாட்டு பீங்கான் ஓடுகள் என்பதை அறிந்து, மாணவர்கள் ஆவணப்படுத்தியுள்ளது பாராட்டுக்குரியது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : China , Government school, students, study, ceramic tiles
× RELATED சொல்லிட்டாங்க…