சென்னை: நீலகிரி மாவட்டத்தில் மே 20,21ம் தேதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊட்டி மலர் கண்காட்சி நடத்தப்படாமல் இருந்து வந்த சூழலில் மே 20ம் தேதி முதல் 25ம் தேதி வரை 5 நாட்கள் மலர் கண்காட்சி நடைபெறுகிறது. இதனிடையே மலர் கண்காட்சிக்காக கடந்த ஜனவரி மாதமே மலர் செடிகள் நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பூங்கா முழுவதும் 275 வகைகளில் 5.5 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன. இதுதவிர மலர் மாடங்கள், கண்ணாடி மாளிகையில் காட்சிப்படுத்துவதற்காக 35 ஆயிரம் தொட்டிகளில் பல்வேறு வண்ண மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டன.
ஊட்டியில் கடந்த மாதம் அவ்வப்போது பெய்த மழை காரணமாக மலர் செடிகள் நன்கு வளர்ந்து மேரிகோல்டு, டேலியா உள்ளிட்ட அனைத்து வகை மலர்கள் பூத்து குலுங்குகின்றன. இந்த மலர் கண்காட்சியை வரும் 20ம் தேதி மலர் கண்காட்சியை முதல்வர் தொடங்கி வைக்கிறார். இதற்காக 19ம் தேதி இரவு சென்னையில் இருந்து கோவை வழியாக ஊட்டி செல்கிறார். அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான நீகழ்வுகளும் தயாராகி வருகிறது. ஆகவே 20, 21 ஆகிய இரு தினங்கள் நீலகிரி மாவட்டத்தில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி புதிய திட்டங்களை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
முதல்வர் வருகையையொட்டி கண்காட்சியை சிறப்பாக நடத்தும் வகையில் பூங்கா பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது. பூங்காவில் உள்ள பழமையான கட்டிடங்கள் வர்ணம் தீட்டப்பட்டு பொலிவுபடுத்தப்பட்டு வருகிறது.